search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுத்தம் செய்த ஒரு வாரத்தில் நாராயணபுரம் ஏரியில் மீண்டும் மருத்துவ கழிவுகளை கொட்டிய அவலம்
    X

    சுண்ணாம்பு கொளத்தூர் நாராயணபுரம் ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்

    சுத்தம் செய்த ஒரு வாரத்தில் நாராயணபுரம் ஏரியில் மீண்டும் மருத்துவ கழிவுகளை கொட்டிய அவலம்

    • குப்பை தொட்டி அகற்றப்பட்டபிறகு மருத்துவ கழிவுகள் நாராயணபுரம் ஏரியில் கொட்டப்பட்டன.
    • மருத்துவ கழிவுகள் ஏரி முழுவதும் காணப்பட்டன.

    சென்னை:

    சென்னை சோழிங்கநல்லூர் தாலுகாவில் உள்ள சுண்ணாம்பு கொளத்தூரில் நாராயணபுரம் ஏரி மற்றும் அதன் தடுப்பணை உள்ளது. இந்த நாராயணபுரம் ஏரிக்கரை அருகே சாலையோரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்பை தொட்டியை சென்னை மாநகராட்சி வைத்தது.

    அந்த குப்பை தொட்டியில் மருத்துவ கழிவுகள் சட்ட விரோதமாக கொட்டப்பட்டு வந்தன. தொடர்ந்து மருத்துவ கழிவுகளை அதிக அளவில் கொட்டி வந்ததால் அந்த குப்பை தொட்டியை மாநகராட்சி அகற்றியது.

    குப்பை தொட்டி அகற்றப்பட்டபிறகு இந்த மருத்துவ கழிவுகள் நாராயணபுரம் ஏரியில் கொட்டப்பட்டன. இந்த மருத்துவ கழிவுகள் ஏரி முழுவதும் காணப்பட்டன. இதையடுத்து நாராயணபுரம் ஏரியில் இருந்து கடந்த 1 வாரத்திற்கு முன்பு மருத்துவ கழிவுகள் முழுவதும் அகற்றப்பட்டன. ஏரியும் சுத்தம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஏரியை சுத்தம் செய்த ஒரு வாரத்தில் நாராயணபுரம் ஏரியில் மீண்டும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த அவலம் நீடித்து வருகிறது. இந்த முறை ஏரியில் காலாவதியான மருந்துகளும் கண்டு பிடிக்கப்பட்டன. இதுகுறித்து அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சியிடம் புகார் அளித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    நாராயணபுரம் ஏரியில் மீண்டும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. நேற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன. சென்னை நகரம் முழுவதும் இது போன்று 15 இடங்களாவது உள்ளன. அவை மருத்துவ கழிவு கொட்டும் வழக்கமான இடங்களாக மாறிவிட்டன. இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுத்து, மருத்துவ கழிவுகளை கொட்டும் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவமனைகளின் கழிவுகளை கொட்டியதற்கான ஆதாரத்தை அளித்த பிறகும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஏரி விரைவில் சுகாதார சீர்கேடாக மாறும் என்பதால் இதில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகள் இதுபோன்ற கழிவுகளை கொட்டாமல் இருப்பதை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும்.

    இதை ஒழுங்குப்படுத்தவும் வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மருத்துவ கழிவுகளை அகற்ற ஒரு வழிமுறையை கொண்டு வர வேண்டும். அவர்கள் மருத்துவமனைகள் மற்றும் கிளீனிக்குகளை கண்காணிக்க வேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக அதிகாரிகள் குறை கூறுவதை ஏற்க முடியாது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டியது தொடர்பாக அருகில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்படும். இனி கண்காணிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக நாங்கள் அனைத்து மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளோம். மருத்துவ கழிவுகளை சேகரிக்க வேண்டாம் என்று உள்ளாட்சி அமைப்புக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். இதுபோன்ற மருத்துவ கழிவுகளை மீண்டும் கொட்டும் மருத்துவமனைகள் மற்றும் கிளீனிக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×