search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜெயலலிதா மரணம்  தொடர்பான விசாரணை- முதலமைச்சரிடம் அறிக்கையை தாக்கல் செய்தது ஆறுமுகசாமி ஆணையம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை- முதலமைச்சரிடம் அறிக்கையை தாக்கல் செய்தது ஆறுமுகசாமி ஆணையம்

    • எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணையம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 600 பக்கங்களை கொண்ட இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது.
    • எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணையம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 600 பக்கங்களை கொண்ட இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது.

    சென்னை:

    முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கிய நிலையில் அவர், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    75 நாட்கள் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்த போராட்டம் நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டார்.

    ஆணையம் 3 மாதத்துக்குள் விசாரணையை முடித்து தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சென்னை எழிலகத்தில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தனி அலுவலகம் உருவாக்கப்பட்டது. அங்கு 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கின.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள், ஜெயலலிதா மற்றும் சசிகலா உறவினர்கள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அலுவலர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 158 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.

    இந்தநிலையில் அப்பல்லோ மருத்துவமனை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் 2019ம் ஆண்டு ஏப்ரல் 26-ந்தேதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மருத்துவ நிபுணர்குழு நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை விடுத்தது.

    இதனால் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டது. இதேபோன்று பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டதால் ஆணையத்துக்கு தமிழக அரசு 14 முறை கால நீட்டிப்பு வழங்கியது.

    ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை 3 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. முதல் கட்டத்தில் 13 மாதங்கள் 147 அமர்வுகளில் விசாரணை நடந்தது. அப்போது 154 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2வது கட்டத்தில் 3 ஆண்டுகளாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை.

    சுப்ரீம் கோர்ட்டு தடை ஆணை விலக்கி கொள்ளப்பட்ட பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் மூன்றாவது கட்டமாக விசாரணை தொடங்கியது. சில வாரங்களில் 3-வது கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அப்போது 12 முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியை ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது.

    ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை ஆவணங்களை ஆய்வு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்தது. முதலில் 550 பக்கங்கள் கொண்ட அறிக்கையாகத்தான் ஆறுமுகசாமி ஆணையம் தயார் செய்து இருந்தது. அப்பல்லோ மருத்துவமனை கேட்டுக்கொண்டபடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்த கருத்துக்கள் சுமார் 50 பக்கங்கள் சேர்க்கப்பட்டன. இதனால் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை 600 பக்கங்களாக அதிகரித்தது.

    அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணையம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 600 பக்கங்களை கொண்ட இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என தனித்தனியாக இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையின் போது தெரியவந்த முக்கிய அம்சங்கள் என தனியாக 200 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இறுதி அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டும் வகையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

    இவை அனைத்தையும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று காலை தாக்கல் செய்தார்.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஜெயலலிதாவுக்கு என்னென்ன உடல்நல பாதிப்புகள் இருந்தன?, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்பு அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததற்கான காரணம் என்ன?, சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டிருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமா?, ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த பல்வேறு உடல்நல பாதிப்புகள் தான் அவரது மரணத்துக்கு முழு காரணமா? அல்லது வேறு ஏதேனும் சந்தேகங்கள் உள்ளனவா? என பல்வேறு முக்கியமான அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக ஆணையம் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

    அடுத்தகட்டமாக இந்த அறிக்கை தமிழக அரசால் பரிசீலிக்கப்பட்டு விவாதத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும். அனேகமாக நாளை மறுநாள் (29ந் தேதி) நடக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மீது விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    அதன்பிறகு மேல் நடவடிக்கைக்காக சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தெரிகிறது. இதையடுத்து அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×