search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற இளம்பெண்- போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
    X

    கொலை செய்யப்பட்ட பெரியசாமி, கைதான பிரேமா.

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற இளம்பெண்- போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

    • பெரியசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
    • விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்றதாக பிரேமா அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் தெரிவித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சி செல்லிபாளையம் காலனியை சேர்ந்தவர் பெரிய சாமி (37), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 23-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் செல்லிப்பாளையம் பகுதியில் ஒரு வளையில் சென்ற போது எதிரே வந்த வாகனம் மோதி பெரியசாமி இறந்ததாகவும், பிரேமா காயமின்றி தப்பியதாகவும் கூறப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக மோகனூர் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர். பெரியசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    இதனிடையே பிரேமா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிரேமாவின் நடவடிக்கையை போலீசார் கண்காணித்தனர். அப்போது கணவர் இறந்த பிறகும் பிரேமா மகிழ்ச்சியாக இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் பிரேமாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்றதாக பிரேமா அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    எனது கணவர் பெரியசாமி கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இதில் கிடைக்கும் வருமானத்தில் 2 குழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை. இதனால் நான் மோகனூரில் உள்ள பேக்கரியில் வேலைக்கு சேர்ந்தேன்.

    அப்போது அங்கு பணியாற்றி வந்த ஒருவருடன் கடந்த 4 மாதங்களாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதனை அறிந்த எனது கணவர் என்னை கண்டித்தார். மேலும் பேக்கரிக்கு வந்து சத்தம் போட்டார். அப்படி இருந்தும் அவருடன் கள்ளக்காதலை என்னால் விட முடியவில்லை.

    இதனிடையே அந்த பேக்கரியில் இருந்து என்னையும், கள்ளக்காதலனையும் வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். இதனால் நான் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தேன். செல்போனில் மட்டுமே கள்ளக்காதலனுடன் பேசி வந்தேன்.

    இருப்பினும் நேரில் சந்திக்க முடியாததால் இருவரும் தவித்து வந்தோம். எனவே பெரியசாமியை கொலை செய்தால் மட்டுமே இருவரும் சந்தோசமாக வாழ முடியும் என 2 பேரும் நினைத்தோம். இது தொடர்பாக நானும், கள்ளக்காதலனும் சேர்ந்து பெரியசாமியை கொலை செய்து விபத்து நடந்தது போல் நாடகமாட முடிவு செய்தோம். திட்டமிட்டபடி சம்பவத்தன்று நள்ளிரவு காது வலிக்கிறது என நான் கணவரிடம் கூறினேன். அவர் என்னை மோகனூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார்.

    இது பற்றி கள்ளக்காதலனுக்கு தகவல் கொடுத்தேன். மோகனூர் செல்லும் வழியில் ஒரு வளைவில் கள்ளக்காதலன் நின்று கொண்டிருந்தார். அவர், பெரியசாமி மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கினார். இதில் காயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் கள்ளக்காதலன் தப்பி சென்றுவிட்டார். அதன்பிறகு உறவினர்களிடம் வாகனம் ஒன்று மோதி கணவர் இறந்துவிட்டதாக தகவல் கொடுத்தேன். இதனால் உறவினர்களுக்கு என் மீது சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால் போலீசாரின் ரகசிய கண்காணிப்பில் நான் சிக்கிக் கொண்டேன். இவ்வாறு அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    பிரேமாவை கைது செய்த போலீசார் பெரியசாமி கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் தலைமறைவான கள்ளக்காதலனை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை மனைவி திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×