

அமலாக்கத்துறை விசாரணையின்போது முதலமைச்சர் அத்துமீறி நுழைவது ஆரோக்கியமான சூழல் அல்ல என மம்தா பானர்ஜியை உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் உத்திகளை வகுக்கும் ஐ-பேக் (I-PAC) நிறுவனத்தின் தலைவர் பிரதீக் ஜெயின் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய சில இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே முதலமைச்சர் மம்தா பானர்ஜி அங்கு சென்று சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், சோதனை நடக்கும் இடத்திற்கு ஒரு முதலமைச்சர் செல்வது அசாதாரண நிலை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு,
“இங்கு ஒரு மாநில முதலமைச்சர் அரசு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, மத்திய அரசு நிறுவனத்தின் பணியில் தலையிட்டுள்ளார். அப்போது அதற்கான தீர்வு என்ன? நாளை வேறொரு முதலமைச்சர் இதேபோல் மீண்டும் செய்தால் என்னவாகும்?
இத்தகைய இயல்பற்ற, நெருக்கடியான சூழலுக்கு ஈடுகொடுக்கும் வகையில், இதற்கென ஒரு முறையான தீர்வை நாம் கண்டறிய வேண்டும்.”
என தெரிவித்துள்ளது.