இந்தூரில் சாண எரிவாயு ஆலையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

சாண எரிவாயு ஆலை உற்பத்தி செய்யும் இயற்கை உரங்கள் விவசாயம், தோட்டக்கலை பயன்பாட்டில் ரசாயன உரங்களுக்கு மாற்றாக பயன்படுத்த வழங்கப்படும்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

இந்தூர்: 

குப்பைகள் இல்லாத நகரங்களை உருவாக்கும் தொலைநோக்கோடு இரண்டாம் கட்ட தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் கழிவை பணமாக்கும் மற்றும் சுழற்சி பொருளாதாரம் என்ற கொள்கைகளின் கீழ் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் அமைக்கப்பட்ட சாண எரிவாயு ஆலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

இங்கு நாளொன்றுக்கு 550 டன் பிரிக்கப்பட்ட மட்கும் குப்பைகள் சுத்திகரிக்கப்படும். அதேபோல நாளொன்றுக்கு 17,000 கிலோ இயற்கை எரிவாயுவையும், 100 டன் இயற்கை உரத்தையும் உற்பத்தி செய்யும்.

இந்த ஆலை பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை குறைத்து இயற்கை உரத்தை வழங்குவதோடு, பசுமை எரிசக்தியையும் வழங்கும். இந்த ஆலைக்காக ரூ.150 கோடி செலவிடப்பட்டுள்ளது. 

இங்கு உற்பத்தி செய்யும் இயற்கை வாயுவில் 50 சதவீதத்தை இந்தூர் நகராட்சி கொள்முதல் செய்யும். இந்த எரிவாயு நகர பேருந்துகளில் எரிபொருளாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com