search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு நீடிப்பு- பீகாரில் நடக்கும் முழு அடைப்பில் வன்முறை: வாகனங்களுக்கு தீ வைப்பு
    X

    அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு நீடிப்பு- பீகாரில் நடக்கும் முழு அடைப்பில் வன்முறை: வாகனங்களுக்கு தீ வைப்பு

    • பீகார் மாநிலத்தில் தான் இளைஞர்கள் அதிகளவில் வன்முைறயில் ஈடுபட்டுள்ளனர்.
    • நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டது.

    பாட்னா:

    ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் நடந்த போராட்டம் வன்முறையானது.

    குறிப்பாக பீகார் மாநிலத்தில் தான் இளைஞர்கள் அதிகளவில் வன்முைறயில் ஈடுபட்டுள்ளனர்.

    பீகார், உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் போராட்டம் பரவி உள்ளது.

    நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. தெலுங்கானாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். போராட்டம் காரணமாக 340-க்கும் மேற்பட்ட ரெயில் சேவை பாதிக்கப்பட் டது. 234 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.

    இந்த போராட்டம் இன்று 4-வது நாளாக வட மாநிலங்களில் நீடித்தது.

    இந்த நிலையில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில இந்தி மாணவர்கள் அமைப்பு 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த முழு அடைப்பின் போது பீகாரில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இன்று காலை போராட்டக்காரர்கள் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை தீவைத்து எரித்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதே போல போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பீகாரில் பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    ஜெகனாபாத்தில் போலீஸ் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. அங்கு போலீசார் மீதும் கல்வீச்சும் நடந்தது. இந்த முழு அடைப்பு காரணமாக கயா, புக்சர், ஜெகனாபாத் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 12 மாவட்டங்களில் இணைய தள சேவை முடக்கப்பட்டு இருந்தது. முன்கர் பகுதியில் மாணவர்கள் டயர்களை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

    லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதை அந்த கட்சியின் பீகார் மாநில தலைவர் ஜெகதானந்த் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, 'ராணுவத்தில் குறுகியகால ஆள் சேர்ப்பு திட்டம் நாட்டின் இளைஞர்களின் நலன்களுக்கு எதிரானது. இந்த திட்டத்துக்கு எதிராக தெருக்களில் போராட்டம் நடத்துபவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.

    லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராஜ் பஸ்வான் கூறும்போது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று இன்று கவர்னரை சந்தித்து அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற கோரி மனு கொடுக்க உள்ளோம். அக்னிபாத் திட்டம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும். இது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கும் என்றார்.

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் நேற்றைய போராட்டத்தின் போது ரெயில் நிலையம் சூறையாடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். இதே போல அரியானாவில் 15 பேர் கைதாகி உள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் உள்ள ஜவுன்பூரில் போராட் டக்காரர்கள் பஸ்கள் மற்றும் போலீஸ் வேன்களை தாக்கி தீ வைத்து எரித்தனர்.

    பஞ்சாப் மாநிலத்திலும் இன்று வன்முறை பரவியது. லுதியானாவில் ரெயில் நிலையத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கினார்கள். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    Next Story
    ×