நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளில் சினிமா தியேட்டரை சூறையாடிய ரசிகர்கள்

திரையரங்கில் இருந்த இருக்கைகள், ஏ.சி உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி ரசிகர்கள் சேதப்படுத்தினர். சுமார் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளில் சினிமா தியேட்டரை சூறையாடிய ரசிகர்கள்
Published on

திருப்பதி:

ஆந்திராவில் பிரபல சினிமா நடிகரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விசாகப்பட்டினத்தில் உள்ள லீலா மஹால் திரையரங்கில் 2 காட்சிகள் பவன் கல்யாண் ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த தியேட்டரில் 700 பேர் மட்டுமே உட்கார்ந்து படம் பார்க்க முடியும். ஆனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் சினிமா தியேட்டருக்குள் நுழைந்தனர். அவர்கள் உட்கார்ந்து படம் பார்க்க முடியாததால் போதையில் இருந்த ரசிகர்கள் சினிமா திரையை பிளேடால் கிழித்தனர். இதுகுறித்து சினிமா தியேட்டர் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு 4 போலீசார் மட்டுமே வந்ததால் அவர்களால் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து 2-வது காட்சி திரையிடப்பட்டது. அப்போது ஆவேசமடைந்த பவன் கல்யாண் ரசிகர்கள் திரையை முழுவதுமாக கிழித்து அதில் ஹாப்பி பர்த்டே பவன் கல்யாண் என எழுதினர்.

மேலும் திரையரங்கில் இருந்த இருக்கைகள், ஏ.சி உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். சுமார் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா தியேட்டர் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதால் இதனை சீரமைக்க 5 நாட்கள் ஆகும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவன் கல்யாண் பிறந்த நாளில் சினிமா தியேட்டர் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com