என் மலர்
இந்தியா

இதய நோய்... குழந்தைகளின் சிகிச்சைக்கு அனுமதியுங்கள் - கண்ணீர் மல்க பாகிஸ்தானியர் கோரிக்கை
- காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்
- பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது.
அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, நாட்டில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், விசா ரத்து என பல்வேறு அதிரடிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மருத்துவ விசா தவிர பிற விசாக்கள் மூலமாக இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு விதித்திருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்திய அரசின் இந்த உத்தரவால் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் தங்களின் குழந்தைகளின் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் பாகிஸ்தானிய தம்பதி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய அக்குழந்தைகளின் தந்தை, "எனது 7 மற்றும் 9 வயது குழந்தைகளுக்கு பிறவி இதய நோய் உள்ளது. அவர்களின் உயர் சிகிச்சைக்காக டெல்லி வந்தோம். ஏற்கனவே சுமார் ரூ.1 கோடி வரை செலவாகியுள்ளது.அடுத்த வாரம் அறுவை சிகிச்சை உள்ள நிலையில் பஹல்காம் தாக்குதலால் எங்களை உடனடியாக பாகிஸ்தான் திரும்பச் சொல்கிறார்கள். இரு நாட்டு அரசுகளும் தயவு செய்து என் குழந்தைகளின் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.






