என் மலர்
இந்தியா

இந்தியாவில் நடப்பாண்டில் கூட்ட நெரிசல்களில் சிக்கி 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- மன்சா தேவி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.
- ரெயில் ஏற காத்திருந்த பக்தர்கள் இடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகாண்டின் ஹரித்வாரில் உள்ள மன்சா தேவி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் (2025) கோவில் திருவிழாக்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் 70-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
ஜூன் 4, 2025: ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.
மே 3, 2025: கோவாவின் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோவிலின் வருடாந்திர திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர்.
பிப்ரவரி 15, 2025: புதுடெல்லி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளாவுக்கு ரெயில் ஏற காத்திருந்த பக்தர்கள் இடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.
ஜனவரி 29, 2025: மகா கும்பமேளாவின் புனித நீராடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், பிரயாக்ராஜில் உள்ள சங்கமம் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் (அரசு தரவுகள்) உயிரிழந்தனர்.
ஜனவரி 8, 2025: திருப்பதி வெங்கடேஸ்வரர் சுவாமி கோவிலில் வைகுண்ட துவார தரிசன டிக்கெட்டுகளை வாங்க பக்தர்கள் முண்டியடித்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.
இவற்றின் மூலம், பொது இடங்களில் கூட்ட நெரிசலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருக்கும் குறைபாடுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.






