ஈரான், இஸ்ரேலில் இருந்து 4,400க்கு அதிகமான இந்தியர்கள் மீட்பு

ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் 4,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதுவரை 19 சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஈரான், இஸ்ரேலில் இருந்து 4,400க்கு அதிகமான இந்தியர்கள் மீட்பு
Published on

புதுடெல்லி:

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சமீபத்தில் போர் நடைபெற்றது. இதையடுத்து, அந்த இரு நாடுகளில் வசித்து வந்த இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மத்திய அரசு கடந்த 18-ம் தேதி ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்நிலையில், இதுவரை 19 சிறப்பு விமானங்களில், 4,400-க்கும் அதிகமான இந்தியர்களை இந்தியா மீட்டுள்ளது என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆபரேஷன் சிந்துவின் ஒரு பகுதியாக 3 இந்திய போர் விமானங்கள் உள்பட 19 சிறப்பு விமானங்கள் மூலம் மொத்தம் 4,415 இந்திய நாட்டினர் (ஈரானில் இருந்து 3,597 பேர் மற்றும் இஸ்ரேலில் இருந்து 818 பேர்) இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

9 நேபாள நாட்டினர், 4 இலங்கை நாட்டினர் மற்றும் ஒரு இந்திய நாட்டவரின் ஈரானிய மனைவி ஆகியோர் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் உதவிய எகிப்து மற்றும் ஜோர்டான் அரசாங்கத்தின் ஆதரவுக்கு நன்றி கூறுகிறோம். இஸ்ரேல், ஜோர்டான் மற்றும் எகிப்தில் உள்ள இந்திய தூதரகங்கள் டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக தலைமையகத்துடன் மிகவும் நெருக்கமாக ஒத்துழைத்தன.

இந்தியர்களை வெளியேற்றுவதற்காக தங்கள் வான்வெளியைத் திறந்தனர். இந்த சிறப்புச் செயலுக்கு ஈரான் அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.

ஈரான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் கள நிலைமையை மத்திய அரசு மதிப்பிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com