இனி முன்பதிவு ரொம்ப ஈஸி.. இன்று அறிமுகமாகும் IRCTC புது இணையதளம் - சிறப்பம்சங்கள் என்ன?

5 மடங்கு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
IRCTC
IRCTC
Published on

ஆன்லைனில் ரெயில் டிக்கெட் பதிவது மக்களுக்கு என்றும் தலைவலியான விஷயமாக இருந்து வருகிறது. ரெயில்வேயின் ஐஆர்சிடி இணையதளமும் செயலியும் பலராலும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

புதிய இணையதளம்

இந்த சூழலில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சந்திக்கும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களுடன் கூடிய புத்தம் புதிய இணையதளத்தை ஐஆர்சிடிசி இன்று அறிமுகப்படுத்த உள்ளது.

இன்று (ஜூலை 15) முதல் இந்த புதிய இணையதளம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

புதிய அம்சங்கள்

தற்போது ஒரு நிமிடத்திற்கு 32,000 டிக்கெட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. புதிய தளம் மூலம் இனி ஒரு நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகளை கையாளும் வகையில் 5 மடங்கு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிமிடத்திற்கு 4 லட்சம் டிக்கெட் நிலவரம் குறித்த Enquiry-களை மட்டுமே தளம் தாங்கும். இனி ஒரே நேரத்தில் 40 லட்சம் Enquiry-களை இணையதளம் எந்தவித தொய்வுமின்றி உடனுக்குடன் வழங்கும்.

விளம்பரங்கள் மற்றும் தேவையற்ற பாப் அப்கள், கிராபிக்ஸ் பக்கங்கள் இல்லாமல் புதிய இணையதளம் மிகவும் எளிமையாக மாற்றப்பட்டுள்ளது.

பயணிகள் வெவ்வேறு தேதிகளுக்கான டிக்கெட் கட்டணங்களை ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்து தங்களுக்கு சாதகமான தேதியைத் தேர்வு செய்யலாம்.

ரெயிலின் அனைத்து வகுப்புகளுக்கான இருக்கை இருப்பு விபரங்களையும் தனித்தனியாகத் தேடாமல், Single Screen-இல் பார்த்துக் கொள்ளலாம்.

பயணிகள் தங்களுக்கு விருப்பமான இருக்கை அல்லது படுக்கை வசதியை எளிதாகத் தேர்வு செய்யும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய தளத்தில் மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கான சிறப்புச் சலுகை அடிப்படையிலான சேவைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பல இந்திய மொழிகளில் இந்தத் தளத்தைப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com