search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது: தலைவர்கள் காணொலியில் பங்கேற்பு
    X

    இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது: தலைவர்கள் காணொலியில் பங்கேற்பு

    • காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
    • சிவசேனா, சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம், கம்யூனிஸ்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதி நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து புதிய ஆட்சிக்காக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் தேர்தல் தேதி அட்டவணை வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்பட 27 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன.

    இந்த கூட்டணி தலைவராக காங்கிரஸ் தலைவர் கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். ஆனால் இதுவரை எந்த ஒரு விஷயத்திலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    இதையடுத்து மீண்டும் ஆலோசனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் 5 மாநில தேர்தல் வந்ததால் காங்கிரஸ் கட்சியால் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு ஒரு தடவை காணொலி காட்சி மூலம் 27 கட்சி தலைவர்களையும் ஒருங்கிணைத்து பேச வைக்க முயற்சி நடந்தது.

    அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தொகுதி பங்கீட்டையும் ஜனவரி இறுதிக்குள் பேசி முடிக்க வேண்டும் என்று தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து மீண்டும் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒருங்கிணைந்து பேச தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காணொலி காட்சி மூலம் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் சார்பில் கார்கே பங்கேற்றார். சிவசேனா, சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம், கம்யூனிஸ்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். இதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் காணொலி காட்சியில் மற்ற தலைவர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இன்றைய இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டத்தை மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி புறக்கணித்தார். தனக்கு வேறு வேலை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இன்றைய கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் அமைப்பாளராக நிதிஷ்குமாரை தேர்வு செய்வதற்கு விவாதிக்கப்படுகிறது.

    Next Story
    ×