search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடன்பட்டது 100 ரூபாய்... 30 ஆண்டுக்கு பிறகு 10 ஆயிரம் ரூபாயாக திருப்பி கொடுத்த ஆசிரியர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கடன்பட்டது 100 ரூபாய்... 30 ஆண்டுக்கு பிறகு 10 ஆயிரம் ரூபாயாக திருப்பி கொடுத்த ஆசிரியர்

    • என் மீது நம்பிக்கை வைத்து ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதித்தீர்கள்.
    • தற்போது 30 ஆண்டுகள் கடந்து விட்டது.

    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் பாபுவை சந்தித்தார். அப்போது அவர் ஒரு கவரை பாபுவிடம் கொடுத்தார். அதை பிரித்துப்பார்த்த பாபு அதிர்ச்சி அடைந்தார். அதில் பல ரூபாய் நோட்டுகள் இருந்தன.

    இந்த பணம் என்று பாபு பேசத்தொடங்கியதும், எதிரில் நின்ற நபர் என் பயண கடன்...அதைத்தான் தற்போது தீர்க்க வந்துள்ளேன் என்று கூறி புதிர்போட்டார். எதுவும் புரியாமல் விழிபிதுங்கி நின்ற பாபுவிடம் உங்கள் கையில் 10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது. அது உங்களுக்குத்தான் வைத்துக்கொள்ளுங்கள் என்று அந்த நபர் கூறினார்.

    மேலும், அவர் தான் திருவனந்தபுரத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும், தனது பெயர் அஜித் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார். அதன்பிறகு அந்த பணத்தை கொடுத்ததற்கான காரணத்தை தெரிவித்தார். அதன்விவரம் வருமாறு:-

    கடந்த 1993-ம் ஆண்டு நான் சங்கனாச்சேரியில் பி.எட். படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது மங்கலத்துநடையில் உள்ள எனது நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு மூவாற்றுப்புழா செல்ல பஸ்சிற்காக காத்து நின்றேன். பஸ் வராததால் ஆட்டோவில் செல்ல முடிவு செய்தேன். ஆனால் என்னிடம் பஸ்சில் செல்வதற்கான பணம் மட்டுமே கையில் இருந்தது. அப்போது ஆட்டோ டிரைவரிடம் ரூ.100 பிறகு தருவதாக கூறி வீட்டிற்கு சென்றேன்.

    இடைப்பட்ட காலத்தில் பல முறை உங்களை சந்தித்து ஆட்டோ கட்டணத்தை கொடுக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. வாய் வார்த்தை என்றாலும் கூட அதுவும் கடன்தானே. இப்போது ரூ.100 பெரிய தொகையல்ல. அந்த காலத்தில் அது பெரிய தொகை. என் மீது நம்பிக்கை வைத்து ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதித்தீர்கள்.

    தற்போது 30 ஆண்டுகள் கடந்து விட்டது. தங்களை சந்திக்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. ஆதலால் ரூ.100-க்கு பதிலாக ரூ.10 ஆயிரம் தந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அப்போதுதான் பாபுவிற்கும் அந்த பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆனால் அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள பாபு மறுத்தார். அதே நேரம் விடாப்பிடியாக அன்புடன் அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அஜித் கூறினார். ரூ.100 கடனை 30 ஆண்டுகள் கடந்தும் நேர்மையுடன் ரூ.10 ஆயிரமாக ஆசிரியர் திருப்பி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×