பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீடுகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, இளம்பெண்களின் தலைமுடியை வெட்டிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தர்ஹார் கிராமத்தை சேர்ந்த டாக்டர் பவன் குமார் மிஸ்ரா வீட்டில் புகுந்த கும்பல், உறங்கிக்கொண்டிருந்த அவரது மருமகள் கரிஷ்மா தேவிவை தாக்கி, கை கால்களை கட்டி போதை ஊசி போட்டுள்ளனர்.
பின்னர் ரூ.35 ஆயிரம் பணம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையடித்து, சத்தம் வராமல் இருக்க டி.வி.யை சத்தமாக வைத்து விட்டு செல்லும் முன் கரிஷ்மாவின் தலைமுடியை வெட்டிச் சென்றுள்ளனர். சுயநினைவின்றி கிடந்த பெண்ணை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்தனர்.
இதேபோல் ஒரு வாரத்திற்கு பிறகு அதே பகுதியை சேர்ந்த ஆசிரியர் சுமன் குமார் சௌத்ரி வீட்டிலும் கொள்ளை நடந்தது. மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்த கும்பல், ஆசிரியரின் இளைய மகளின் தலைமுடியையும் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இரண்டு சம்பவங்களும் வியாழக்கிழமை நடந்ததாலும், முறைகள் ஒரே மாதிரி இருந்ததாலும் இது ஒரே கும்பலின் வேலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தடயவியல் குழுவுடன் விசாரணை நடந்து வருகிறது.
ஆனால் "தலைமுடியை வெட்டி செல்லும் கும்பல்" என்ற தகவல் தர்ஹார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.