ஜெய் ஸ்ரீராம்-ஜெய் பாலஸ்தீனம்: ஒவைசி பதவியேற்பில் சர்ச்சை

இன்று 2-வது நாளாக பதவிப்பிரமாணம் நடைபெற்று வருகிறது. தமிழக எம்.பி.க்கள் இன்று மதியம் பதவி ஏற்றுக்கொண்டனர்.
ஜெய் ஸ்ரீராம்-ஜெய் பாலஸ்தீனம்: ஒவைசி பதவியேற்பில் சர்ச்சை
Published on

புதுடெல்லி:

18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார். பிரதமர் மோடி உள்பட 279 பேர் நேற்று எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.

இன்று 2-வது நாளாக பதவிப்பிரமாணம் நடைபெற்று வருகிறது. தமிழக எம்.பி.க்கள் இன்று மதியம் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் வென்ற ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி மக்களவை எம்பியாக பதவியேற்றுக் கொண்டார்.

ஒவைசி பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டதும், 'ஜெய் பாலஸ்தீனம்' என முழக்கமிட்டார். இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடந்து வரும் சூழலில் வாழ்க பாலஸ்தீனம் என முழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓவைசி, ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கூறினர். அதுபோல நானும் ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம் என கூறினேன். இது எப்படி நாட்டிற்கு எதிரானதாக இருக்கும்? அரசியல் சட்டத்தில் உள்ள விதியைக் காட்டுங்கள் என கேள்வி எழுப்பினார்.

அசாதுதீன் ஒவைசி பதவியேற்கச் செல்லும் முன் 'ஜெய் ஸ்ரீராம்' என பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com