search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கலவர பூமியில் விதவைகளின் கதறல்: கண்டு கொள்ளாத பிரதமர், முதல்வர்
    X

    கலவர பூமியில் விதவைகளின் கதறல்: கண்டு கொள்ளாத பிரதமர், முதல்வர்

    • மணிப்பூர் கலவரத்தில் 180 பேர் உயிரிழந்தனர்; 300 பேர் காயமடைந்தனர்
    • தற்போது வரை மணிப்பூருக்கு பிரதமர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3 அன்று இரு பிரிவினருக்கிடையே வெடித்த மோதல் கலவரமாக மாறி நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. கலவரத்தில் இரு பிரிவினருக்கும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது. இரு தரப்பிலும் சுமார் 180 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். பல குடும்பங்கள் வன்முறைக்கு பயந்து மணிப்பூரை விட்டு அண்டை மாநிலங்களுக்குள் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டது.

    கலவரத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்த சில வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வருகின்றன. அத்தகைய ஒரு வீடியோவில், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் அழுகின்ற ஒரு கைக்குழந்தையை வைத்து கொண்டு, கணவனை இழந்த பெண் ஒருவர் கணவரின் உடலை கண்டு கதறியழும் காட்சிகள் காண்போரின் இதயத்தை கனக்க செய்கிறது.

    சுமார் 4 மாத காலமாக ஒரு மாநிலத்தில் உயிர்பலி தொடரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து பாராளுமன்றத்திலோ பொதுவெளியிலோ கருத்து ஏதும் தெரிவிக்காததும், அம்மாநில மக்களை வந்து சந்திக்காததும், வீடுகளையும், உடைமைகளையும், சொத்துக்களையும் இழந்தவர்களுக்கு ஆறுதல் கூற கூட வராததும், அவர்களுக்கு நஷ்ட ஈடாகவும் ஏதும் அறிவிக்காததும் அகில இந்திய அளவில் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவின் உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வில் மோடிக்கு அடுத்து நம்பர் 2. இடத்தில் உள்ளவருமான அமித் ஷா இதுவரை பாதிக்கப்பட்ட இரு இனத்தை சேர்ந்த மக்களையும் சந்திக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    அம்மாநிலத்தின் ஆளும் பா.ஜ.க. முதல்வர் பிரேன் சிங் ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால்தான் நிலைமை கை மீறி போனதாக விமர்சிக்கும் மக்கள், உணர்வுபூர்வமான ஒரு பிரச்சனையை அலட்சியமாக கையாளத்தான் அவர் முதல்வாரானாரா என கேட்கின்றனர்.

    Next Story
    ×