

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த 2024-ம் ஆண்டில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அப்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
இதில் மாநிலங்களவை எம்.பி.யான ராகவ் சத்தா பங்கேற்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் மதுபான ஒதுக்கீட்டு வழக்கில் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டார். அப்போதும் ராகவ் சத்தா எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆம் ஆத்மியின் வெற்றி கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.
ஆம் ஆத்மியின் மாநிலங்களவை துணைத்தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய துணைத்தலைவராக அசோக் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவை செயலாளரிடம் கடிதம் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ராகவ் சத்தா தனது எக்ஸ் வலைதளத்தில், அமைதியாக இருப்பதால் தோற்று விட்டதாக நினைக்க வேண்டாம் என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ராகவ் சத்தாவின் இந்தப் பதிவுக்கு ஆம் ஆத்மி கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அனுராக் தண்டா வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த சில ஆண்டாகவே நீங்கள் மோடிக்கு எதிராகப் பேச அச்சப்படுகிறீர்கள். நாட்டின் உண்மையான பிரச்சனைகளை எழுப்ப அஞ்சுகிறீர்கள் என பதிவிட்டிருந்தார்.