

கல்வி கற்பதற்கும், கனவுகளை துரத்துவதற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 71 வயது முதியவர் ஒருவர் மருத்துவப் படிப்பில் மூத்த குடிமக்களுக்கு இடஒதுக்கீடு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான அசோக் பகார் என்ற முதியவர், 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்குத் தயாராகி வரும் ஒரு தீவிர மருத்துவ ஆர்வலர் ஆவார். மருத்துவராக வேண்டும் என்ற தனது 52 ஆண்டுகால நீண்ட கனவை நனவாக்க அவர் தொடர்ந்து முயன்று வருகிறார்.
தனது வயதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்வியைக் கற்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது என்று வாதிடும் அசோக் பகார், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் முக்கிய அம்சங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதில், தகுதிவாய்ந்த மூத்த குடிமக்களுக்கு MBBS சேர்க்கையில் 1% சிறப்பு இடஒதுக்கீடு அல்லது தனி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் கல்வி கற்கும் உரிமை வயது முதிர்வோடு முடிந்துவிடுவதில்லை. என குறிப்பிட்டுள்ளார்.
நாடெங்கும் நீட் தேர்வு குறித்த விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், 71 வயது முதியவர் ஒருவர் தனது லட்சியத்திற்காக சட்டப் போராட்டம் நடத்துவது கல்வி வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வழக்கு வரும் ஜூலை 21 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.