பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் இன்றுடன் முடிவடைகிறது.
பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
Published on

கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

இதையடுத்து அவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தேடிவந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த போது பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 6ம் தேதியுடன் அவரது காவல் முடிவடைந்தது.

இதையடுத்து போலீசார் மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மேலும் 5 நாட்கள் போலீசார் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதையடுத்து மீண்டும் 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதைதொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர் பெரும்பாலான கேள்விகளுக்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையே பிரஜ்வல் பிறந்து வளர்ந்த ஹோலே நரசிப்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் நாயுடு தலைமையில் இந்த சோதனை நடந்தது. சுமார் 4 மணி நேரம் அவரது வீட்டில் இந்த சோதனை நடந்தது. அப்போது பிரஜ்வலை பார்த்து அவரது தந்தை ரேவண்ணா கண்ணீர் விட்டு அழுதார். இதைப்பார்த்த பிரஜ்வலும் அழுதார். பின்னர் போலீசார் பிரஜ்வலை அங்கிருந்து மீண்டும் விசாரணை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

பிரஜ்வல் ஜெர்மனியில் பதுங்கி இருந்த போது அவர் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரஜ்வல் தங்க மற்றும் அவருக்கு தேவையான பண உதவிகளை அவரது காதலி செய்து இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் இன்றுடன் முடிவடைகிறது. எனவே அவரை மீண்டும் இன்று மாலை நீதிமன்றதத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து பெங்களூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com