

சென்னை:
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, அ.தி.மு.க.வின் உயர் மட்டக்குழுவின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கூடியது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனையடுத்து, டி.டி.வி தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்களை நீக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தினகரன் பக்கம் உள்ள மாவட்ட செயலாளர்களான வெற்றிவேல், கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன், முத்தையா, ரங்கசாமி, பார்த்திபன் ஆகியோரின் கட்சி பதவிகள் பறிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கண்ட அனைவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில் ஜெயலலிதாவால் கட்சி பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்கள் அந்த பதவியில் அப்படியே தொடர்வார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.