அனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்

ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்பவரை திருமணம் செய்ய இருக்கும் விஷால், அவருடன் ஏற்பட்ட காதல் குறித்து மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். #Vishal #Anisha
அனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்
Published on

நடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி திருமணத்தை முடிவு செய்துள்ளனர். திருமண நிச்சயதார்த்தம் விரைவில் ஐதராபாத்தில் நடக்கிறது.

ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சரிதா தம்பதியின் மகள் ஆவார். ‘அர்ஜூன் ரெட்டி’, ‘பெல்லி சூப்லு’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ள அனிஷா, சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கணை ஆவார்.

அனிஷாவுடான காதல் குறித்து விஷால் கூறியதாவது:-

கடந்த நவம்பர் மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்த ‘அயோத்யா’ படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்தார். அபூர்வா இயக்கத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் ‘ஆல் அபவுட் மிச்செலோ’ ஆங்கில படக்குழுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்படத்தில் அனிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெரும்பாலான விவசாய குடும்ப பெண்கள் பணியாற்றுவதை கண்டு வியந்து இப்படத்தை தயாரிக்க முன்வந்தேன். அன்று முதல் படம் தொடர்பாக அனிஷாவை சந்தித்து வந்தேன்.

தற்போது அது திருமணத்துக்கு வந்துள்ளது. அவரை கடவுள் எனக்காக அனுப்பி இருக்கிறார். அவரிடம் நான் தான் முதலில் காதலை வெளிப்படுத்தினேன்.

திருமணத்துக்கு பிறகு அவர் நடிக்க வேண்டாம் என்று கூற மாட்டேன். அவருக்கு எது இஷ்டமோ அதை செய்யலாம். சமீபத்தில் அனிஷா புலிக்கு பயிற்சி அளிக்கும் வீடியோ ஒன்றை பார்த்தேன். அதில் புலிக்கு பயிற்சி அளித்து அதை தூங்க வைக்கிறார்.

இந்த ஆண்டு மிருகங்கள் தொடர்பான படத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறேன். இதில் அனிஷாவின் பங்களிப்பு, கருத்து கேட்க விரும்புகிறேன். எல்லாம் சரியாக அமைந்தால் இந்த ஆண்டு படம் இயக்குவேன். அதில் அனிஷாவும் இடம் பெறுவார்.

புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்தில் எனது திருமணம் நடக்கும் என்று கூறி இருந்தேன். அதற்கு அனிஷாவும் சம்மதித்து உள்ளார். கட்டிடம் கட்டும் வரை காத்து இருப்பதாக கூறி உள்ளார்.

இவ்வாறு விஷால் கூறினார்.

இதற்கிடையே அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ``புதிய வாழ்க்கைக்குள் கால் பதிக்கிறேன். என்னோடு பயணிக்க, என் சுக துக்கங்களில் பங்குபெற என் காதலை நான் சந்தித்து விட்டேன். இவருக்குக்காகதான் என் வாழ்க்கை முழுவதும் காத்துக்கொண்டிருந்தேன்’’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com