இம்சை அரசன் படத்தில் நடிக்க முடியாது - வடிவேலு

பொருளாதார குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலைஉள்ளதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். #IA24P #Vadivelu
இம்சை அரசன் படத்தில் நடிக்க முடியாது - வடிவேலு
Published on

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் நடிக்க 1-6-2016-ல் ஒப்புக்கொண்டேன். 2016 டிசம்பருக்குள் படத்தை முடித்து விடுவதாகவும் அதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால் வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன்.

ஆனால் டிசம்பர் 2016 வரை படப்பிடிப்பை தொடங்காமலேயே காலம் தாழ்த்தினர். ஆனாலும் தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி அதன் பிறகும் பல்வேறு தேதிகளில் அந்த படத்தில் நடித்து கொடுத்தேன். இந்த நிலையில் என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை எஸ்.பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியது.

அத்துடன் கெட்ட நோக்கத்தோடு எனது புகழுக்கும், பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தை கொடுத்து அந்த கடிதத்தில் ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

நான் நடித்து தர மறுத்து இருந்தால் பட நிறுவனம் ஏன் டிசம்பர் 2016-க்குள் புகாரை தரவில்லை. ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்துக்கு பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு ஒப்புக்கொண்ட பிறகு 2016-2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன்.

இதனால் எனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டது. இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் என்னை வற்புறுத்துவதற்கு முன்பு என்னை நேரில் அழைத்து கருத்து கேட்காதது விதிகளுக்கு முரணானது. இந்த படத்தில் நாசர் நடிப்பதால் நடிகர் சங்க நலனுக்காக அவரால் செயல்பட முடியாத நிலைமை உள்ளது. இதில் தொடர்ந்து நடித்தால் நான் ஒப்பந்தமாகி உள்ள வேறு படங்கள் பாதிக்கப்படும்.

பொருளாதார குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.”

X

Maalai Malar
www.maalaimalar.com