ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான படம் `தரமணி'. இப்படம் தாமதமாக வெளியானாலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்திற்கு அதிகமாக கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களால் மூன்று வாரங்களுக்கும் அதிகமாக ஓடிய படம், புதிய படங்களின் வருகை காரணமாக காட்சிகள் நிறுத்தப்பட்டது.
தற்போது வரி விதிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வேலை நிறுத்தத்தால் புதிய படங்கள் வெளியாவது நிறுத்தப்பட்டிருந்தது. சென்ற வாரம் வெளியான 'சோலோ' படம் ஒரு நாள் மட்டும் ஓடிய நிலையில், அடுத்த நாளில் இருந்து காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
தற்போது இந்த வாரம் புதிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், 'தரமணி' மீண்டும் திரையரங்கில் திரையிடப்பட இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் இது குறித்து படத்தின் மறுவெளியீட்டு போஸ்டருடன் டுவிட்டரில், மீண்டும் படம் வெளியாகும் என்ற தகவலை பதிவு செய்திருந்தார்.