

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘கூழாங்கல்’ படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறது.
அந்த வகையில், இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான டைகர் விருதை வென்றது. கொரோனா பரவல் காரணமாக இந்த விருது விழாவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனால் நேரில் கலந்துகொள்ள முடியாமல் போனது.
கூழாங்கல் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘கூழாங்கல்’ படம் வென்ற டைகர் விருது தற்போது சென்னை வந்தடைந்துள்ளது. அந்த விருதுடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் உற்சாகமாக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் ‘கூழாங்கல்’ என்பது குறிப்பிடத்தக்கது.