நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறாய் - சூர்யாவுக்கு இயக்குனர் வஸந்த் பாராட்டு

சூர்யாவை அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் வஸந்த், சூரரைப் போற்று படத்தை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
வஸந்த், சூர்யா
வஸந்த், சூர்யா
Published on

இயக்குனர் வஸந்த், 1999ஆம் ஆண்டு தனது ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் மூலம் சூர்யாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அதன்பின் திரையுலகில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்த சூர்யா, தனது கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். 

சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையுலகினர் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சூர்யாவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் வஸந்த், சூரரைப் போற்று படத்தை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

''அன்புள்ள சூர்யாவுக்கு,

இந்தப் பாராட்டு கடிதம் உனக்கு இல்லை. நெடுமாறன் ராஜாங்கத்திற்க்கு. முதல் ஃபிரேமிலிருந்து கடைசி ஃபிரேம் வரை உன் ஆட்சிதான். ஃபிரேமுக்கு ஃபிரேம், காட்சிக்கு காட்சிக்கு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறாய். தமிழ்த் திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த உன் அறிமுகத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக உன் நடிப்பை இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும், இது, இதுதான் உன் உச்சம்! இப்போதைக்கு!! நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை, ரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய்.

முதல் காட்சியின் ஆரம்பம் கூட பரவாயில்லை. இறுதியில் நீ வென்ற பிறகு கூட உன் முகத்தில் சிரிப்பு இல்லை. அந்தத் தீவிரத்தன்மை, அந்த சாதிக்க வேண்டும் என்ற வெறி உன் கண்களில் இறுதிவரை தெரிகிறது. கணல் மணக்கும் பூக்களாக... ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்க்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது உன் நடிப்பு. எவ்வளவு இயல்பாக அதுவும் இவ்வளவு இயல்பாக, எதார்த்தமாக துளி மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய்.

உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் ஒரு தொப்பியை மாட்டிக் கொண்டு சொல்கிறேன் “HATS OFF TO YOU MY DEAR SURIYA" என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்துவிட முடியும். ஏனென்றால் என் விதை நீ, என் விருட்சம் நீ, எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது என் உச்சி முகந்து மகிழ்கிறேன்''. இவ்வாறு இயக்குனர் வஸந்த் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com