ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்

‘பிரமாண்ட நாயகன்’ என்ற படத்தில் பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அனுஷ்கா நடித்துள்ளார்.
Published on

பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற தமிழ்ப்படம் அகிலாண்டகோடி 'பிரமாண்ட நாயகன்.' ராமா என்ற வேங்கடசபெருமாள் பக்தனின் உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டு இப்படம் ஜனரஞ்சகமாக உருவாகியுள்ளது. இன்றைய நவீனமான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தை இயக்கியுள்ளவர் சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும் 'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திர ராவ். இது பக்தி ரசமும் சமூகப் பின்னணியும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது. 

பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அனுஷ்கா கதாபாத்திரத்தை உருவாக்கி கதாநாயகியாக நடிக்கவைத்துள்ளனர். மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற சௌரப்ஜெயின் வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.

பாகுபலிக்கு இசையமைத்து புகழ்பெற்ற கீரவாணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார். இது பல ஆன்மீக புராணம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது.

பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு என்ன? திருமலை உருவான விதம் எப்படி? ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம் என்ன? வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம் என்ன? பாலாஜி என்று பெயர் வரக்காரணம் என்ன? திருமலையில் முதலில் யாரை வணங்குவது? எனப் பல கேள்விகளுக்கான விளக்கங்களை இப்படத்தில் தெளிவான படக்காட்சிகளாக அமைத்து விளக்கியுள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமார், "அண்மைக் காலங்களில் வந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான பக்திப் படம். சுவாரஸ்யமாக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. பக்தி மணம் கமழ உருவாகியுள்ளது. படம் பார்த்து முடித்ததும் திருப்பதி தேவஸ்தானம் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது" என்று பாராட்டியுள்ளார். திரையுலகில் பெரிய அனுபவசாலியான அவரது பாராட்டைப் பெருமையாகக் கருதுகிறது படக்குழு.

பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான பிரமாண்ட காட்சிகளுக்குப் பஞ்சமில்லாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பாகுபலிக்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்படி அவரது பாத்திரம் அடைந்து இருப்பது படத்தின் பெருமைகளில் ஒன்று.

தமிழகத் திரைகளில் இந்தப் 'பிரமாண்ட நாயகன்' விஸ்வரூபம் எடுக்கும் விதத்தில் வெளியாகவுள்ளது. ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்டார் பாக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிடுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com