புதுச்சேரி

புதுச்சேரி பூங்காவில் போட்டோஷூட் எடுக்க இனி கட்டணம்...

Published On 2024-05-03 06:22 GMT   |   Update On 2024-05-03 06:22 GMT
  • தற்போது கோடை விடுமுறை என்பதால் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
  • பூங்காவுக்கு வருவோர் செல்போன்களில் படம் எடுக்க எந்த தடையுமில்லை.

புதுச்சேரி:

பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல் என அழைக்கப்படும் புதுவையில் அழகிய வீதிகள், பூங்காக்கள், ரம்மியமான கடற்கரை, பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கட்டிடங்கள், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சுற்றுலா பயணிகளை கவருகிறது.

அழகிய சுற்றுலா தளமான புதுச்சேரிக்கு ஜெர்மன், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரியின் அழகை ரசிப்பதற்கு படையெடுத்து வருகிறார்கள்.

மேலும் புதிதாக திருமணம் செய்பவர்கள் மற்றும் பல்வேறு விசேஷங்களுக்கு போட்டோஷூட் எடுக்க விரும்புபவர்கள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.

அவர்கள் பிரெஞ்சு கலாச்சாரம் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் முன்பும் நின்று அழகிய கலைநயம் மிக்க போட்டோஷூட் மற்றும் வீடியோ எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கடற்கரை சாலை அருகே உள்ள மிகவும் பிரபலமான புகழ்வாய்ந்த பாரதி பூங்காவிலும் பல்வேறு தரப்பு மக்கள் போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பாரதி பூங்காவில் போட்டோஷூட் மற்றும் வீடியோ எடுக்க நகராட்சியில் வருவாய் பிரிவை அணுகி அனுமதி பெற வேண்டும் எனவும் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும் அப்போதுதான் அனுமதி வழங்கப்படும் என்று பாரதி பூங்காவின் நுழைவு வாயில் முன்பு நகராட்சி சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் பூங்காவுக்கு வருவோர் செல்போன்களில் படம் எடுக்க எந்த தடையுமில்லை என்றும் கேமராக்கள் மூலம் படம் எடுக்க மட்டுமே கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News