உலகம்

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு

Published On 2024-05-04 03:14 GMT   |   Update On 2024-05-04 03:14 GMT
  • சிந்து ஆற்றங்கரை அருகே அந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
  • விபத்தில் 3 பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்:

வடமேற்கு பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து ஹன்சாவுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

காரகோரம் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. மலைப்பாங்கான அந்த பகுதியில் இருந்து விலகிய பஸ் அங்கிருந்த பள்ளத்தாக்கில் உருண்டு ஓடியது. பின்னர் சிந்து ஆற்றங்கரை அருகே அந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் பஸ்சில் இருந்தவர்கள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு மீட்பு படையினருடன் போலீசார் விரைந்தனர்.

அப்போது விபத்துக்குள்ளான பஸ்சில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் அவர்கள் இறங்கினர். எனினும் அதற்குள்ளாக இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 21 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. எனவே இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News