உலகம்

இஸ்ரேலுக்கு பிரான்சு அதிபர் கடும் எதிர்ப்பு

Published On 2024-03-25 11:23 GMT   |   Update On 2024-03-25 11:23 GMT
  • எகிப்து எல்லையை யொட்டியுள்ள இப்பகுதியில் இஸ்ரேல் படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
  • காசாவுக்குள் நுழையும் அனைத்து இடத்தையும் உடனடியாக திறக்க வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த சண்டைக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதில் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிர் இழந்து வருவதால் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின் றன. ஆனாலும் இஸ்ரேல் தனது முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறது.

சண்டை நீடித்து வருவதால் காசா முகாம்களில் உள்ள பொதுமக்கள் உயிர் பயத்தில் இருந்து வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட எதுவும் சரிவர கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு காசா நகரமான ரபாவில் தங்கி உள்ளனர். எகிப்து எல்லையை யொட்டியுள்ள இப்பகுதியில் இஸ்ரேல் படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

இங்கிருந்து பொதுமக்களை இஸ்ரேல் கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு பிரான்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் ரபாவில் இருந்து பொதுமக்களை கட்டாயமாக வெளியேற்ற முயற்சி செய்வது போர் குற்றமாகும், காசாவுக்குள் நுழையும் அனைத்து இடத்தை யும் உடனடியாக திறக்க வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் வடக்கு காசாவில் மிகப்பெரிய அல்-ஷிபா மருத்துவமனை அருகில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று குருத் தோலை ஞாயிறையொட்டி காசாவில் அமைதி திரும்ப வேண்டும் என பிரார்த்தனை நடந்தது.

Tags:    

Similar News