தமிழ்நாடு

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு

Published On 2024-05-09 15:50 GMT   |   Update On 2024-05-09 15:50 GMT
  • ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
  • இந்த மனு குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவு.

தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் உள்ளிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து இருக்கிறது. மேலும், மே 1 ஆம் தேதி முதல் இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நல சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே. ஸ்ரீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில், மருத்துவர்கள் விதிமீறல்களில் ஈடுபடவில்லை. பணி நிமித்தமான அவசர பயணம் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக மனுதாரர் தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, ஆம்புலன்ஸ்-க்கு விலக்கு தரப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு தனியாக விலக்கு தர சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்தது.

இதையடுத்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்த மனு குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, மே 22 ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தது. 

Tags:    

Similar News