தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு- முதலமைச்சர் இரங்கல்

Published On 2024-05-09 12:30 GMT   |   Update On 2024-05-09 12:30 GMT
  • உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதோடு,
  • காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள செங்கமலப்பட்டி, கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள செங்கமலப்பட்டி, கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்த தொழிலாளர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News