உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் ஆம்னி பஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்து- 10 பயணிகள் படுகாயம்

Published On 2024-03-28 03:42 GMT   |   Update On 2024-03-28 03:42 GMT
  • சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
  • விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பூர்:

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பல்லடம் வழியாக மதுரை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. பஸ்ஸில் 46 பயணிகள் பயணம் செய்தனர்.

பஸ்சை மதுரையைச் சேர்ந்த முருகானந்தம்(36) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் பல்லடத்தில் அண்ணா நகர் என்ற பகுதியில் திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை ஓட்டுநர் கவனிக்காததால் அதில் மோதி பஸ் தாறுமாறாக சென்று தலைகீழாக கவிழ்ந்தது.

விபத்தில் சிக்கிய பயணிகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பல்லடம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதில் 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருந்தது. அவர்களை உடனடியாக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் லேசான காயங்கள் ஏற்பட்ட 36 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர்.

தொடர்ந்து திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடக்கும் பஸ்சை அப்புறப்படுத்தும் பணியில் பல்லடம் போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News