உள்ளூர் செய்திகள்

டிப்பர் லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2024-04-28 03:56 GMT   |   Update On 2024-04-28 03:56 GMT
  • வாய்ப்பாடி வழியாக தினமும் ஏராளமான டிப்பர் லாரிகள் சென்று வருகிறது.
  • சிறை பிடிக்கப்பட்ட டிப்பர் லாரிகளை 3 மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் விடுவித்தனர்.

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வாய்ப்பாடி வழியாக சிறுக்களஞ்சி, கூத்தம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளுக்கு குழாய் வழியாக காவிரி குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

வாய்ப்பாடி வழியாக தினமும் ஏராளமான டிப்பர் லாரிகள் சென்று வருகிறது. இதில் அதிக பாரம் ஏற்றி சென்ற டிப்பர் லாரிகளால் காவிரி குடிநீர் குழாய் கடந்த 6 மாதத்திற்கு முன்பே உடைந்து தண்ணீர் வெளியேறி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் வாய்ப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சாலப்பாளையம் பகுதிக்கு காவிரி குடிநீர் முழுமையாக செல்லவில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் வாய்ப்பாடியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வழியே சென்ற டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர்.

அப்போது உடைந்த குழாயை சரி செய்தால்தான் லாரிகளை விடுவிப்போம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் லாரி உரிமையாளர்கள் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்து தருவதாக உறுதியளித்தனர்.

மேலும் உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்யும் பணி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட டிப்பர் லாரிகளை 3 மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News