உள்ளூர் செய்திகள்

தொழில் முன்னோடி திட்டத்தின் மூலம் தொழில் அதிபர்களாக உயர்ந்த 1303 ஆதி திராவிடர்கள்

Published On 2024-05-09 10:05 GMT   |   Update On 2024-05-09 10:05 GMT
  • பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும்.
  • 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-க்குள், ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்திட உறுதி பூண்டுள்ளார். அதற்காக, பல்வேறு திட்டங்களைப் புதிதுபுதிதாக உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.

"அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" எனும் புதிய திட்டத்தை 2023-2024-ம் ஆண்டு அறிவித்து, ரூ.100 கோடி அனுமதித்தார்.

இந்த திட்டம் பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும். இதில் தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை அரசு மானியமாகவும், 65 சதவீத, மூலதன தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது.

அவற்றின் பயனாகப் தொழில்கள் தொடங்குவதற்காக மொத்தம் 12,472 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 7,365 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுப் பல்வேறு வங்கிகளுக்குப் பரிந்துரைகள் செய்யப்பட்டது.

மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன. அத்துடன், முனைவு

பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 1,303 தொழில் முனைவோர்க்கு அரசு மானியமாக மட்டும் 159.76 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் ௨௮௮ மகளிர் தொழில் முனைவோர் 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு மானிய உதவியுடன் வங்கிக் கடன்கள் பெற்று ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்கள் பலர், பல்வேறு தொழில்களைத் தொடங்கித் தொழில் அதிபர்களாக உயர்ந்துள்ளனர்.

இதுபற்றி சிவகங்கை மாவட்ட தொழில் மையம் மூலம் பயன்பெற்ற எஸ்.அஞ்சலி கூறுகையில், "அண்ணல் அம்பேத்கர் தொழில்

முன்னோடிகள் திட்டம் பற்றி அறிந்து சிவகங்கை மாவட்டத் தொழில் மையம், அலுவலகம் சென்று எனது நார் இழை பைகள் நெய்யும் தொழில் தொடங்குவது குறித்துத் தெரிவித்தேன்.

அதனைத்தொடர்ந்து, இத்திட்டத்தில் விண்ணப்பித்து ரூ.32 லட்சத்து 70 ஆயிரம் வங்கி கடன் பெற்று, அதற்கு 35 சதவீத மானியமும் 6 சதவீத வட்டி மானியமும் பெற்றுத் தொழில் தொடங்கினேன். தற்போது 10 பணியாளர்கள் எனது நார் இழை பைகள் நெய்யும் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.

இதன்மூலம் மாதம் 4 லட்சம் ரூபாய் வருவாயும், ரூ.70 ஆயிரம் லாபமும் பெறுகிறேன். இத்திட்டத்தை நடைமுறைப் படுத்திய முதல்-அமைச்சருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

Tags:    

Similar News