தமிழ்நாடு
சந்தனம் அரைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களையும், அரைத்து வைத்த சந்தனத்தையும் படத்தில் காணலாம்.

நாகூர் தர்கா கந்தூரி விழாவில், 14-ந் தேதி ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம்

Published On 2022-01-10 04:56 GMT   |   Update On 2022-01-10 04:56 GMT
நாகூர் தர்காவின் 465-வது சந்தனக்கூடு நிகழ்ச்சிக்காக சந்தனக் கட்டைகளை கல்லில் வைத்து தேய்த்து சந்தனம் எடுக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 465-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 4-ந்தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா வருகிற 13-ந்தேதி இரவு நாகை யாஹசைன் பள்ளி வாசலில் இருந்து கொடி ஊர்வலமும், 14-ந்தேதி அதிகாலை ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தன கட்டைகளை அரைத்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த யாத்திரீகர்கள் 10 நாட்கள் தர்காவில் தங்கி சந்தன கட்டைகளை சிறுசிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி துவங்கியது.

சந்தன கட்டைகளை ஜவ்வாது கலந்த பன்னீரில் ஊறவைத்து கருங்கற்களில் அரைத்து எடுக்கப்படும். பின்னர் அரைக்கப்பட்ட சந்தனம், குடங்களில் நிரப்பப்பட்டு, நாகை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் ஒப்படைக்கப்படும். பின் நாகை யாஹசைன் பள்ளி வாசலில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு அதிகாலை நாகூர் வந்தடையும்.

பின்னர் தர்கா தலைமாட்டு வாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்கா சன்னதிக்குள் கொண்டு செல்லப்பட்டு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். இதையடுத்து சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
Tags:    

Similar News