முக்கிய விரதங்கள்

இன்று ஆனிமாத சிவராத்திரி... விரதம் இருந்து சிவ வழிபாடு செய்ய உகந்த நாள்...

Published On 2023-07-15 04:48 GMT   |   Update On 2023-07-15 04:48 GMT
  • சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்தால் பிரச்சினைகள் எல்லாம் தீரும்.
  • தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு.

மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது. நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைபிடித்துவருகின்றனர்.

விரதம் கடைபிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணைசெய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாத சிவ ராத்திரி வழிபாடும் ஒவ்வொரு தெய்வத்தால் வழிபடப்பட்டதாகும். அதன் முழு விபரத்தை இங்கே பார்க்கலாம்.

1. சித்திரை மாதம் :- இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமாதேவியால் வழிபடப்பட்டது.

2. வைகாசி மாதம் :- வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவானால் வழிபடப்பட்டது.

3. ஆனி மாதம் :- வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசனால் வழிபடப்பட்டது.

4. ஆடி மாதம் :- தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.

5. ஆவணி மாதம் :- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.

6. புரட்டாசி மாதம் :- வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

7. ஐப்பசி மாதம் :- வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.

8. கார்த்திகை மாதம் :- இரண்டு சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

9. மார்கழி மாதம் :- வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.

10. தை மாதம் :- வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.

11. மாசி மாதம் :- தேய்பிறை-தேவர்களால் வழிபடப்பட்டது.

12. பங்குனி மாதம் :- வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.

மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், சிவ நாமங்களை சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். மாத சிவராத்திரியில் சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபட வேண்டும். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்தால் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைப்பார் சிவபெருமான்.

Tags:    

Similar News