null
சென்னை ஆலையில் மின்சார கார் உற்பத்தி.. பழைய ஃபார்முக்கு வரும் ஃபோர்டு
- ஆலைகளில் கார் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டது.
- ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் விலைக்கு வாங்கியது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் சென்னை மறைமலை நகர் மற்றும் குஜராத்தில் உள்ள சனந்த் என இரண்டு இடங்களில் தனது தொழிற்சாலையில் கார் தயாரித்து வந்தது. இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்ததால், ஆலைகளில் கார் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டது. இனிமேல் இந்தியாவில் உள்ள தங்களது இரண்டு தொழிற்சாலைகளிலும் கார்கள் தயாரிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்தது ஃபோர்டு.
சென்னை மறைமலை நகர் தொழிற்சாலையை ஒப்பிடுகையில், குஜராத்தில் உள்ள தொழிற்சாலை மிகவும் நவீனமானது. குஜராத் மாநிலம் சனந்தில் உள்ள ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 726 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மறைமலை நகரில் இருக்கிற ஆலையை வாங்க மஹிந்திரா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது.
எனினும், மஹிந்திரா மற்றும் ஃபோர்டு இடையே சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனைத்தொடர்ந்து, ஜே.எஸ்.டபிள்யு. குழுமம் மற்றும் ஃபோர்டு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்ட்டது. இந்த நிலையில், அதனையும் ஃபோர்டு நிறுவனம் ரத்து செய்தது.
இந்நிலையில், சென்னை ஆலையை விற்பனை செய்ய ஃபோர்டு நிறுவனத்துக்கு திட்டம் இல்லை என்றும் ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்டு தொழிற்சாலையை, மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆலையாக மாற்ற முடியுமா என்பதை ஆராய்வதற்காக ஃபோர்டு நிறுவனத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போது மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ள காரணத்தால் இந்தியாவில் ஒரு ஆலையை ஏற்றுமதி தளமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது ஃபோர்டு நிறுவனம். எனவே, இந்தியாவில் போர்ஃடு நிறுவனம் மீண்டும் போல்டாக செயல்பட உள்ளது.