search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலே டெஸ்ட்: 498 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்தியா; 2-வது இன்னிங்சில் 189/3
    X

    காலே டெஸ்ட்: 498 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்தியா; 2-வது இன்னிங்சில் 189/3

    காலே டெஸ்டில் இந்தியா 498 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்துள்ளது.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி தவான் (190), புஜாரா (153), ரகானே (57), ஹர்திக் பாண்டியா (50) மற்றும் அஸ்வின் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் அதிகபட்சமாக 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 54 ரன்னுடனும், தில்ருவான் பெரேரா 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடக்க வீரர் உபுல் தரங்கா 64 ரன்கள் எடுத்திருந்தார்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மேத்யூஸ் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹெராத் 9 ரன்னிலும், பிரதீப் 10 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    ஆனால் மறுமுனையில் அரைசதம் கடந்த தில்ருவான் பெரேரா அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். அவர் 90 ரன்னைத் தாண்டி முதல் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். ஆனால் எதிர்முனையில் நின்ற குமாரா, ஜடேஜா பந்தில் போல்டாக, இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 291 எடுத்திருந்தது.

    குணரத்னே காயத்தால் விளையாடாததால் அத்துடன் இலங்கை அணி முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது. தில்ருவான் பெரேரா 92 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.


    81 ரன்கள் சேர்த்த அபிநவ் முகுந்த்

    291 ரன்னில் இலங்கை சுருண்டதால் இந்தியா முதல் இன்னிங்சில் 309 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இலங்கை அணி பாலோ-ஆன் ஆனாலும், இந்தியா பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    தொடக்க வீரர்களாக தவானும், அபிநவ் முகுந்தும் களம் இறங்கினார்கள். தவான் 14 ரன்கள் எடுத்த நிலையில் பெரேரா பந்தில்  ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த புஜாரா 15 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.


    ஹர்திக் பாண்டியா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்த பிரதீப்

    முதல் இன்னிங்சில் ஏமாற்றம் அளித்த அபிநவ் முகுந்த், விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    இருவரும் அரைசதம் அடித்து சதம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்கள். அபிநவ் முகுந்த் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குணதிலகா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. விராட் கோலி 76 ரன்களுடன் களத்தில் உள்ளார். அபிநவ் முகுந்த் - விராட் கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.


    76 ரன்களுடன் களத்தில் இருக்கும் விராட் கோலி

    இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக தற்போது வரை இந்தியா 498 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை 4-வது நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளைக்கு முன்பு வரை அதிரடியாக விளையாடி 600 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்று இலங்கை அணியை இந்தியா சேஸிங் செய்ய பணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×