search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "politicians"

    கோவை கள்ளநோட்டு கும்பலுடன் அரசியல்பிரமுகர்கள், தொழில் அதிபர்களுக்கு தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. #fakecurrency
    கோவை:

    கோவை சாய்பாபா காலனியில் கடையை வாடகைக்கு எடுத்து கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த 2 மாதமாக இங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளனர். பின்னர் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    இந்த கும்பலில் ஏஜெண்டுகள் பலர் உள்ளனர். அவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கும் பிரிந்து சென்று ஒரிஜினல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கள்ள நோட்டுகளையும் கலந்து புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டியில் கோடை சீசன்களை கட்டி இருந்தது. நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்ததால் அங்கு கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இதை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    இதற்காக கோவையில் இருந்து கள்ளநோட்டுகளை ஐஸ் வியாபாரிகள் போல நடித்து மோட்டார் சைக்கிள்கள் மூலம் ஐஸ்கிரீம் டப்பாவுக்குள் மறைத்து வைத்து கடத்தி சென்றுள்ளனர். சில நேரங்களில் பஸ்களில் சாதாரண பயணிகள் போல பயணம் செய்தும் கள்ளநோட்டுகளை கொண்டு சென்று ஊட்டியில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    கிதர் முகமது

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிதர் முகமதுவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அரசியல்பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் எண்கள் இருந்துள்ளது. அவர்கள் யார்-யார்? எந்தெந்த வகைகளில் இவர்களுக்கு உதவி செய்தார்கள்? என விசாரணை நடந்து வருகிறது.

    கோவையில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் ஏஜெண்டுகள் மூலம் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தல் நேரத்தில் புழக்கத்தில் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கும்பல் தலைவனான சுந்தருக்கு சர்வதேச அளவில் கள்ளநோட்டு கும்பல் மற்றும் கேரளாவை சேர்ந்த ஹவாலா கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. அதன் மூலம் குஜராத்தில் இருந்து நவீன வெள்ளை காகிதங்களை வரவழைத்து கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர்.

    சுந்தர் பிடிபட்டால் கள்ளநோட்டு கும்பலின் மொத்த நெட்வொர்க் பற்றியும் தகவல் கிடைக்கும் என போலீசார் கருதுகின்றனர். எனவே சுந்தரை கைது செய்வதற்காக கூடுதல் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சுந்தர் மீது கேரளாவில் கள்ளநோட்டு வழக்கு, யானை தந்தம் கடத்திய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தனிப்படை போலீசார் கேரளாவில் உள்ள அவரது நண்பர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரமடையில் அவர் தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு கள்ளநோட்டுகளோ, அச்சடிக்க தேவையான பொருட்களோ இல்லை.

    கைதான கிதர் முகமது இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இவரையும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஆனந்தையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர். #fakecurrency
    தற்போது சந்தேகத்தின்பேரில் குழந்தை கடத்துபவர்கள் என்று நடுரோட்டில் மக்கள் நடத்தும் தாக்குதலைப்போல, ஊழல்வாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட ரொம்ப நாள் ஆகாது என்று ஈஸ்வரன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குழந்தையை கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அப்பாவி நபர்களையும், முதியோர்களையும் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்கும் நிலை உருவானதற்கு காவல் துறையின் மெத்தனமான செயல்பாடுகளும், நடவடிக்கைகளுமே காரணம்.

    இந்த தாக்குதலில் குற்றமே செய்யாத அப்பாவி நபர்கள் உயிரிழந்திருப்பதும், காயமடைந்திருப்பதும் மிகுந்த வேதனையளிக்கிறது. காவல்நிலையங்களில் அரசியல்வாதிகளுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் கிடைக்கும் மரியாதை ஏழை மக்களுக்கு கிடைப்பதில்லை.

    காவல்நிலையங்களுக்கு வரும் ஏழை மக்களிடத்தில் காவல்துறை அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் காவல்துறை மீது வெறுப்பை உண்டாக்குகிறது. குற்றம் செய்தவர்களை பிடித்து காவல்துறையிடம் பொது மக்கள் ஒப்படைத்தாலும் ஒருசில காவல்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து தண்டனைகளை பெற்றுத் தராமல் குற்றவாளிகளை வெளிவிடுவதால்ஏற்பட்ட விளைவுதான் தற்போது பொதுமக்களின் கொடூர தாக்குதலாக மாறியிருக்கிறது.

    144 தடை உத்தரவு, சட்டத்தை கடுமையாக்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவைகளால் மக்களுக்கு காவல் துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தி விட முடியாது. காவல்துறை அதிகாரிகளின் நேர்மையான தொடர்ச்சியான செயல்பாடுகளின் மூலம் தான் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்க முடியும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் அவர்கள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    லஞ்சமும், ஊழலும் வாழ்க்கை முறையாகமாறி வருவது நல்லதல்ல. பணம் படைத்தவர்கள் லஞ்சம் கொடுத்து எந்தவொரு துறையிலும் எதை வேண்டுமானாலும் சாதிக்கும் நிலை இருக்கிறது. லஞ்சமும், ஊழலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. தற்போது சந்தேகத்தின்பேரில் குழந்தை கடத்துபவர்கள் என்று நடுரோட்டில் மக்கள் நடத்தும் தாக்குதலைப்போல, ஊழல்வாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட ரொம்ப நாள் ஆகாது.

    இந்த தாக்குதல்சம்பவம் மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கின்ற பெரும் புரட்சியின் முன்னோட்டத்தை வெளிக்காட்டுகிறது. கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளுங்கட்சியினரின் வேட்புமனுவை மட்டும் பெற்றுக்கொண்டு மற்றவர்கள் மனுவை பெற மறுப்பதும், நிராகரிப்பதும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சக்கட்டம்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். #Tamilnews
    ×