search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai rains"

    • மகாராஷ்டிராவில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.
    • 4 மாத கைக்குழந்தை திடீரென நழுவி சாக்கடைக்குள் விழுந்தது.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதில் தானே மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. அந்த வகையில் கல்யாண் நோக்கி சென்ற மின்சார ரெயில் ஒன்று தாக்குர்லி- கல்யாண் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடுவழியில் நின்றது. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் பலர் இறங்கி தண்டவாளம் வழியாக நடந்து சென்றனர்.

    இதேபோல பிவண்டியை சேர்ந்த யோகிதா (வயது25) என்ற பெண் பயணியும் தனது 4 மாத பெண் குழந்தையுடன் ரெயிலில் இருந்து இறங்கினார். சாக்கடை கால்வாய் மேலே இருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது யோகிதா கையில் இருந்த 4 மாத கைக்குழந்தை திடீரென நழுவி சாக்கடைக்குள் விழுந்தது. அந்த குழந்தை சாக்கடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதைப்பார்த்து குழந்தையின் தாய் கதறி அழுதார். அந்த வழியாக சென்றவர்கள் யோகிதாவை ஆசுவாசப்படுத்தினர்.

    தகவல் அறிந்த கல்யாண் ரெயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். கால்வாயில் அடித்து செல்லப்பட்ட கைக்குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    மும்பை பரேலில் உள்ள கே.இ.எம். மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டு பிவண்டி திரும்பியபோது யோகிதாவிற்கு இந்த துயரம் நேர்ந்துள்ளது. தாயின் கையில் இருந்து நழுவி விழுந்த கைக்குழந்தை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இரண்டு நாட்களாக கனமழை
    • நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பழங்குடியினர் வாழும் பல குக்கிராமங்கள் உள்ளன

    வடஇந்தியாவில் பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கும் மேலாக மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. அதேபோல குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

    தொடர்மழை காரணமாக தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் மும்பையில் லோக்கல் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பகுதியில் சுமார் 46 வீடுகள் இருக்கின்றன.

    இதில் பழங்குடியின சமூகத்தினர் வசித்து வருகின்றனர். தொடர்ந்து பெய்த மழை காரணமாக இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் இடிபாடுகளில் 30 குடும்பங்களை சேர்ந்த 100 பேர் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் தாசில்தார் நேரில் சென்றுள்ளனர். மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து ராய்காட் மாவட்ட கலெக்டர் யோகேஷ் மசே கூறுகையில், "இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்திருக்கிறது. தாசில்தாரை உள்ளடக்கிய மீட்பு குழு மக்களை மீட்டு வருகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற மலைப்பகுதிக்கு வரவேண்டும் எனில், குறைந்தது 2 மணி நேரம் ஆகும். தற்போது இடிபாடுகளில் சிக்கியுள்ள 30 பேரை காப்பாற்றுவதுதான் எங்களுக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.

    மீட்பு பணிகளை மாநில மந்திரி உதய் சாவந்த் நேரில் பார்வையிட்டு வருகிறார். இரவில் வெளிச்சம் குறைவு காரணமாக சிறிது நேரம் மீட்பு பணி நிறுத்தப்பட்டு காலையில் தொடங்கப்பட்டது. மலையின் மேல் பகுதியில் குடிசைகள் அமைத்து வாழ்ந்தவர்களின் வீடுகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு நடந்த இர்சல்வாடி மலையின் உச்சியில் அமைந்துள்ள கிராமமாகும்.

    இந்த பகுதிக்கு செல்ல சரியான பாதை இல்லாததால் சுமார் 1 கி.மீ வரை மலைப்பாதையில் செல்வது மட்டுமே வழியாக இருந்துள்ளது. நிலச்சரிவு நடந்த இடத்திற்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வந்து நிலைமையை ஆய்வு செய்து வருகிறார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவது மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    ஏற்கனவே ராய்கட் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று கூறி வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் மும்பை, பால்கர், ராய்கட், ரத்னகிரி, கோலாப்பூர், சாங்கிலி, நாக்பூர், தானே போன்ற பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மழை வெள்ளம் மற்றும் மீட்பு பணிகளை சமாளிக்க தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் மும்பையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    • புனேயில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேயில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழையால் புனேவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புனேவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியில் செல்லும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

    இடைவிடாது பெய்து வரும் மழையால் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டுள்ளது.

    புனேவைத் தவிர, பால்கர், ராய்காட் மற்றும் சதாரா உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக கல்யாண்-கசரா ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

    ரத்னகிரி மாவட்டத்தில் ஓடும் வஷிஷ்டி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் சிப்லுனில் ரெயில் சேவை நிறுத்தப்படுகிறது என கொங்கண் ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • டெல்லியில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • இடைவிடாது பெய்து வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவும், மரங்கள் முறிவும் ஏற்பட்டுள்ளது.

    மும்பை:

    இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கும். கேரளாவில் ஜூன் 1-ந்தேதியும், வடமாநிலங்களில் 12-ந் தேதியும் தொடங்குவது வழக்கம்.

    இந்த ஆண்டு கேரளாவில் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை இப்போது வடமாநிலங்களில் வெளுத்து வாங்க தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கொலாபா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 86 மில்லி மீட்டர் மழை பெய்தது. நேற்றும் மாநிலம் எங்கும் பல பகுதிகளில் விடிய, விடிய பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    மும்பை காட்கோபர் பகுதியில் 3 மாடி கட்டிடம் தொடர் மழையால் இடிந்து விழுந்தது. இங்குள்ள அறைகளில் சிக்கி கொண்டவர்களை தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர்.

    இதற்கிடையே மத்திய மகாராஷ்டிராவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் குஜராத்தின் கட்ச் பகுதியில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    இதையடுத்து மும்பையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் இருக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    வடகிழக்கு மாநிலமான அசாமிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அசாமின் பர்பேடா, தரங்க், துப்ரி, கோல்பாரா, காம்ரூபா, லக்கிம்பூர், நல்பாரி, உதல்குரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பெய்த மழையால் இங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    மேலும் இங்குள்ள பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. இதையடுத்து இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அசாம் முதல் மந்திரி ஹிமந்த் பிஸ்வா சர்மாவுடன் டெலிபோனில் ஆலோசனை நடத்தினார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    அசாம் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ளும் என்றும் உறுதி அளித்தார்.

    இதுபோல இமாச்சலா பிரதேசம், அரியானாவிலும் கடந்த சிலநாட்களாக மழை பெய்து வருகிறது. அரியானாவின் பஞ்ச்குலா பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது.

    அந்த காரை கிராம மக்கள் கயிறுகட்டி இழுத்து மீட்டனர். அதில் இருந்த பெண்ணும் பத்திரமாக மீட்கப்பட்டார்.

    தலைநகர் டெல்லியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையடுத்து டெல்லியில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்திலும் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நைனி டால், பாகேஷ்வர், டெக்ராடூன், தெஹ்ரி, சம்பாவத் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இப்பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    இடைவிடாது பெய்து வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவும், மரங்கள் முறிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் சார்தாம் செல்லும் யாத்ரீகர்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறு மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங்சாமி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அதிகாரிகளிடம் நிலவரங்களை கேட்டறிந்தார்.

    இதற்கிடையே ருத்திர பிரயாக் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 வயது நபர் பரிதாபமாக இறந்தார். இதுபோல உத்திரகாசி மாவட்டத்தில் நாற்றுநடும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபரும் மழைக்கு பலியானார். இதுதவிர மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மும்பையில் பெய்து வரும் கனமழையால் ரெயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியதால் சிக்கித்தவித்த வெளியூர் பயணிகள் 2000 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். #MumbaiRains
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகளும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், மும்பை நோக்கி வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் வதோதரா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாலா சோபாரா மற்றும் வசாய் ரெயில் நிலையங்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டன. தண்டவாளத்தில் மழைநீர் 2 மீட்டர் உயரத்திற்கு தேங்கியதால் மேற்கொண்டு ரெயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பயணிகளும் இறங்கி செல்ல முடியவில்லை.


    இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு உதவியாக பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர். 6 படகுகளுடன் அவர்கள் வந்ததும், படகுகள் மூலம் இரண்டு ரெயில்களிலும் பயணம் செய்த சுமார் 2000 பயணிகளை மீட்கப்பட்டு, அவர்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பால்கர் மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை அதிகபட்ச அளவாக 240 மிமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #MumbaiRains
    மும்பையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகள், தண்டவாளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், போக்குவரத்து முடங்கியுள்ளது. #MumbaiRains
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கனத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடங்கி மக்கள் அவதியடைந்துள்ளனர். 

    ஒரு வாரமாக இதே நிலை நீடித்து வருவதால் அத்தியாவசிய சேவைகளும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. மிகவும் பிரபலமான டப்பாவாலாக்கள் இன்று தங்களது வேலையை நிறுத்தி வைத்துள்ளனர். ரெயில் நிலையங்களை சூழ்ந்துள்ள மழை நீர் விரைவில் அகற்றப்படும் எனவும், படிப்படியாக ரெயில் சேவை சீரடையும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
    ரெயில் தண்டவாள பாதையில் பாலத்தின் ஒரு பகுதி விழுந்து மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததை பார்த்ததும் சமயோஜிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்திய டிரைவருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. #AndheriBridgeCollapse
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. மும்பை அந்தேரி பகுதியில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டு பகுதி இடித்து கீழே உள்ள ரெயில் பாதையில் விழுந்தது. இதனால், உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன. 

    மின்சார கம்பிகள் அறுந்து விழுந்த நேரத்தில், அந்தேரி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரெயிலை ஓட்டி வந்த டிரைவர் சமயோஜிதமாக செயல்பட்டு, ரெயிலை உடனே நிறுத்தினார். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். இடிந்து விழுந்த பாலம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆய்வு செய்யப்பட்டு, நல்ல நிலையில் இருப்பதாக சான்றிதழ் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ×