search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Lottery"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாலக்காட்டில் விற்பனையான லாட்டரி சீட்டை வாங்கியவர்கள் யார் என்பது தெரியாமல் இருந்தது.
    • பெண் துப்புரவு பணியாளர்கள் குழு, இதற்கு முன் ஓணம் பம்பர் லாட்டரியில் 7,500 ரூபாய் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தில் அந்த மாநில அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுகளுக்கு பம்பர் பரிசு கோடிகள் மற்றும் லட்சங்களில் வழங்கப்படும்.

    இதனால் கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா செல்லக்கூடிய தமிழக மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகளும் கேரள லாட்டரி சீட்டுகளை வாங்குவார்கள். இந்நிலையில் பருவமழைக்கால லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்து வந்தது.

    அதில் பம்பர் பரிசாக ரூ.10 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கும் கோடிக்கணக்கில் பரிசு அறிவிக்கப்பட்டது. பருவமழைக்கால லாட்டரி விற்பனை திட்டத்தில் விற்பனைக்காக 27 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன.

    ஒரு டிக்கெட் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது. பம்பம் பரிசு 10 கோடி ரூபாய் என்பதால் லாட்டரி சீட்டுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் பருவ மழைக்கால லாட்டரி சீட்டு குலுக்கல் முடிவுகள் நேற்றுமுன்தினம் (26-ந்தேதி) வெளியிடப்பட்டது.

    அதில் எம்.பி. 200261 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசான ரூ.10 கோடி விழுந்தது. பாலக்காட்டில் விற்பனையான அந்த லாட்டரி சீட்டை வாங்கியவர்கள் யார் என்பது தெரியாமல்இருந்தது. இந்நிலையில் அந்த லாட்டரி சீட்டை பெண் துப்புரவு பணியாளர்கள் 11 பேர் சேர்ந்து வாங்கியது தெரியவந்தது.

    மலப்புரம் மாவட்டம் பரப்பனகாடி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வரும் அவர்கள், சம்பவத்தன்று ஒரு இடத்தில் குழுவாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர், லாட்டரி சீட்டு வாங்குமாறு கூறியிருக்கிறார். ஆனால் ஒரு டிக்கெட்டின் விலை 250 ரூபாய் என்று கூறினார்.

    இதனைக்கேட்ட துப்புரவு பணியாளர்கள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் இணைந்து ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் வாங்க முடிவு செய்தனர். அதன்படி 9 பேர் தலா 25 ரூபாயும், ஒருவர் மட்டும் 50 ரூபாயும் போட்டு லாட்டரி டிக்கெட் வாங்கினர்.

    இறுதியில் அவர்களுக்கே பம்பர் பரிசான 10கோடி ரூபாய் விழுந்துவிட்டதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பம்பர் பரிசை வென்ற அவர்களுக்கு, நகராட்சி அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த பெண் துப்புரவு பணியாளர்கள் குழு, இதற்கு முன் ஓணம் பம்பர் லாட்டரியில் 7,500 ரூபாய் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பணத்தை பறித்துவிடுவார்களோ என்ற பயத்தால் காய்ச்சல் வந்தது.
    • போலீசார் அவரை ரகசியமாக தங்க வைத்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம் :

    மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிர்ஷூ ராபா. இவர் கடந்த சில ஆண்டுகளாக திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் தங்கியிருந்து, கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிர்ஷூ ராபா தம்பானூரில் உள்ள ஒரு லாட்டரி கடையில் 5 சீட்டுகளை வாங்கி இருந்தார்.

    இந்தநிலையில் கடந்த புதன்கிழமை அந்த லாட்டரி குலுக்கலில் பிர்ஷூ ராபா வாங்கிய சீட்டுக்கு முதல்பரிசு ரூ.1 கோடி விழுந்தது. இதைக்கண்டு அவர் இன்ப அதிர்ச்சியடைந்தார்.

    இதுபற்றிய தகவல் சில நிமிடங்களில் அங்கிருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே காட்டுத்தீ போல் பரவியதால் பிர்ஷூ ராபாவை சந்திக்க குவியத்தொடங்கினர். பரிசு விழுந்த மகிழ்ச்சியில் இருந்த பிர்ஷூ ராபாவுக்கு சில மணிநேரத்தில் நம்மை கொலை செய்து விட்டு லாட்டரி சீட்டை பறித்துக்கொண்டு சென்று விடுவார்களோ என பயம் தொற்றிக்கொண்டது. இதனால் அவர் வேறு வழியின்றி திருவனந்தபுரம் தம்பானூர் போலீஸ்நிலையத்தில் தஞ்சம் அடைந்து விவரத்தை கூறினார்.

    இதைத்தொடர்ந்து, போலீசார் வங்கி அதிகாரிகளை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களிடம் லாட்டரி சீட்டை ஒப்படைக்க வைத்தனர். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆனாலும், பயத்தில் அவருக்கு காய்ச்சலே வந்துவிட்டது. இதனால் மீண்டும் தம்பானூர் போலீசாரை தொடர்பு கொண்டு ஊருக்கு செல்லும் வரை தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரை ரகசியமாக ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர். பணம் கிடைத்து சொந்த ஊருக்கு செல்லும் வரை அவரை தங்களது கண்காணிப்பில் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக தம்பானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கூறினார்.

    கேரள அரசு லாட்டரியில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசு விழுந்தால் அந்த பணம் கிடைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன.அதன்படி கேரள அரசு லாட்டரி வெளிமாநிலங்களில் விற்க அனுமதி இல்லாததால் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசு விழுந்தால் அந்த சீட்டு எப்படி கிடைத்தது. கேரளாவுக்கு வந்தபோது வாங்கப்பட்டதா?. அப்படி என்றால் அது தொடர்பாக சில ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். அதை சரிபார்த்த பின்னரே அவர்களுக்கு பரிசு தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பரிசு விழுந்தால் சந்தோஷப்பட வேண்டும். அதைவிடுத்து அழுவது ஏன்? என்று போலீசார் கேட்டனர்.
    • பரிசு விழுந்த சீட்டை வங்கியில் டெபாசிட் செய்வது உள்பட வழிமுறைகளை தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த தம்பானூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று வடமாநில தொழிலாளர்கள் சிலர் கும்பலாக ஓடிவந்தனர்.

    இதை கண்டு போலீஸ் நிலையத்தில் இருந்தவர்கள் மிரண்டு போனார்கள். மேலும் அவர்கள் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்து பாதுகாப்பு நடவடிக்கையிலும் இறங்கினர். இது எதையும் கண்டுகொள்ளாத தொழிலாளர்கள், போலீசார் அருகில் சென்று அவர்களின் கால்களில் விழுந்து கதற தொடங்கினர்.

    தாக்க வருகிறார்கள் என்று எண்ணிய நிலையில், தொழிலாளர்கள் போலீசார் காலில் விழுந்து அழுததை பார்த்ததும் போலீசார் பதறி போனார்கள். அவர்கள் வடமாநில தொழிலாளர்கள். அனைவருக்கும் ஆறுதல் கூறி எதற்காக அழுதீர்கள் என கேட்டனர்.

    அப்போது அவர்களில் ஒருவர் கையில் லாட்டரி சீட்டுடன் முன்னே வந்தார். அவர் போலீசாரை நோக்கி தனக்கு லாட்டரி குலுக்கலில் ரூ.1 கோடி பரிசு விழுந்திருப்பதாக தெரிவித்தார்.

    பரிசு விழுந்தால் சந்தோஷப்பட வேண்டும். அதைவிடுத்து அழுவது ஏன்? என்று போலீசார் கேட்டபோது, பரிசு விழுந்ததை அறிந்ததும், தன் நண்பர்கள் சிலரால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயமாக உள்ளது. எனவே நான் பரிசு பணத்தை வாங்கிவிட்டு ஊர் போய் சேரும்வரை எனக்கு பாதுகாப்பு தரவேண்டும், என்றார்.

    இதை கேட்டதும் போலீசார், வடமாநில தொழிலாளிக்கு உரிய பாதுகாப்பு தரப்படும் என உறுதி கூறினர். மேலும் பரிசு விழுந்த சீட்டை வங்கியில் டெபாசிட் செய்வது உள்பட வழிமுறைகளை தெரிவித்தனர். அதன்பின்பு பரிசு சீட்டுடன் வடமாநில தொழிலாளியும், போலீசாரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    • சப்ளையராக வேலை பார்த்து வருபவர் செல்வராஜ் (50).
    • கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 4- ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம், பவானி புது பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் சப்ளையராக வேலை பார்த்து வருபவர் செல்வராஜ் (50). இவரிடம் பவானி, கல் தொழிலாளர் வீதியை சேர்ந்த குமார் (36) என்பவர் வெள்ளைத்தாளில் எண்களை எழுதி, கேரள மாநில லாட்டரிச் சீட்டு என கூறி செல்வராஜிடம் பல முறை விற்பனை செய்துள்ளார்.

    இதுகுறித்து, செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 4- ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு லாட்டரி சீட்டு விற்க வந்த போது சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் இருந்தார்.
    • முதல் பரிசான ரூ.75 லட்சம் சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் கடனாக வாங்கிய சீட்டுக்கு கிடைத்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாபுலால் (வயது 55).

    சுமை தூக்கும் தொழிலாளியான இவர் ஆற்றின் குழியில் உள்ள சி.ஐ.டி.யூ. சங்க அலுவலகத்தில் உறுப்பினராக உள்ளார்.

    அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்கும் பெண் ஒருவர் ஒவ்வொரு நாளும் இங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்ய வருவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல லாட்டரி சீட்டு விற்க வந்த போது அங்கு சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் இருந்தார். அவரிடம் 2 லாட்டரி சீட்டு வாங்கும் படி அந்த பெண் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை எனக்கூறி அந்த சீட்டுக்களை கடனாக வாங்கி கொண்டார்.

    கடனாக வாங்கிய லாட்டரி சீட்டின் குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.75 லட்சம் சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் கடனாக வாங்கிய சீட்டுக்கு கிடைத்தது.

    இதனை அறிந்து அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். இந்த பணத்தை கொண்டு குடும்பத்தை காப்பாற்றுவேன் என்றார்.

    • வேலைக்கு செல்லும் வழியில் சோட்டாக் கணிக்கரையில் சாலையோர லாட்டரி கடையில் ஒரு சீட்டு வாங்கியதாக கூறினார்.
    • விபரம் தெரியவந்ததும் தன்னை யாராவது தாக்கி பரிசு விழுந்த சீட்டை பறித்து சென்று விடுவார்களோ என பயப்படுவதாக தொழிலாளி கூறினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மூவாற்று புழா பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வடமாநில தொழிலாளி ஒருவர் பதறியபடி ஓடி வந்தார்.

    போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் அவரை ஆசுவாசப்படுத்தி மூச்சிறைக்க ஓடி வந்ததன் காரணம் பற்றி விசாரித்தனர். அப்போது அவர் தனது பெயர் எஸ்.கே. படேஷ், கொல்கத்தாவில் இருந்து இங்கு கூலி வேலைக்கு வந்ததாக தெரிவித்தார்.

    வேலைக்கு செல்லும் வழியில் சோட்டாக் கணிக்கரையில் சாலையோர லாட்டரி கடையில் ஒரு சீட்டு வாங்கியதாக கூறினார். தான் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசான ரூ.75 லட்சம் விழுந்திருப்பதாக கூறினார்.

    இது பற்றிய விபரம் தெரியவந்ததும் தன்னை யாராவது தாக்கி பரிசு விழுந்த சீட்டை பறித்து சென்று விடுவார்களோ என பயப்படுவதாக கூறினார். இதனால் இன்று இரவு போலீஸ் நிலையத்திலேயே தங்கி கொள்கிறேன் என்றும் கூறினார்.

    அவருக்கு ஆறுதல் கூறிய போலீசார், பரிசு விழுந்த சீட்டை பார்த்தனர். பின்னர் அவருக்கு அந்த சீட்டை வங்கியில் டெபாசிட் செய்வது பற்றிய விபரங்களை எடுத்து கூறினர்.

    அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர். அதன்பின்பே இயல்பு நிலைக்கு திரும்பிய வடமாநில தொழிலாளி போலீஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார்.

    இதுபற்றி அவர் கூறும்போது, பரிசு தொகை கிடைத்ததும் உடனே ஊர் திரும்ப உள்ளதாகவும், அந்த பணத்தை கொண்டு வாழ்க்கையை வளமாக்கி கொள்வேன் எனவும் தெரிவித்தார்.

    • அதிர்ஷ்டசாலி பெயரை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமும் தெரிந்து கொள்ள முடியாது.
    • லாட்டரியில் பரிசு விழும் நபரின் பெயரை வெளியிட வேண்டும் என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி விற்பனை செய்கிறது.

    கேரள லாட்டரியின் பூஜா பம்பர் குலுக்கல் சமீபத்தில் நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.10 கோடி திருச்சூரில் உள்ள லாட்டரி சீட்டு விற்பனை நிலையத்தில் இருந்து விற்பனையான சீட்டுக்கு கிடைத்தது.

    இதையடுத்து ரூ.10 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியை தேடும் பணியில் கேரள லாட்டரி துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    பரிசு விழுந்த பல நாட்கள் ஆகியும் அதிர்ஷ்டசாலியின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை. எனவே இதுபற்றிய தகவல்களை அறிந்து கொள்ள பல்வேறு தரப்பினரும் கேரள லாட்டரி துறை அதிகாரிகளையும், லாட்டரி சீட்டு விற்பனை நிலையத்தினரையும் தொடர்பு கொண்டு கேட்டனர்.

    அதற்கு அவர்கள் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கூறிவிட்டார் என்றனர்.

    இதற்கான காரணம் என்ன? என்று கேட்டபோது, ஏற்கனவே ஓணம் பம்பர் குலுக்கலில் முதல் பரிசு பெற்ற ஆட்டோ டிரைவரிடம், பண உதவி கேட்டு பலரும் நச்சரிக்க தொடங்கினர்.

    இதனால் மனம் உடைந்த அவர், லாட்டரியில் எனக்கு பரிசு விழாமலேயே இருந்திருக்கலாம் என மனம் நொந்து கூறினார். இதுபோன்ற நிலை தனக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இப்போது ரூ.10 கோடி பரிசு விழுந்த நபர் தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் எனக்கூறியுள்ளார், என்றனர்.

    அதிர்ஷ்டசாலி பெயரை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமும் தெரிந்து கொள்ள முடியாது. லாட்டரியில் பரிசு விழும் நபரின் பெயரை வெளியிட வேண்டும் என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 3 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணத்தை எண்ணி கருவூலத்தில் செலுத்துவது வழக்கம்.
    • 3 உண்டியல்களையும் திறந்து காணிக்கையை எண்ணும் பணியை தொடங்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே மத்தியில் அமைந்துள்ளது வீரராகவப் பெருமாள் கோவில். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கையை செலுத்தி செல்கின்றனர்.

    அதனை 3 மாதங்களுக்கு ஒரு இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் திறந்து உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணத்தை எண்ணி கருவூலத்தில் செலுத்துவது வழக்கம். அந்த வகையில் இன்று இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் 3 உண்டியல்களையும் திறந்து காணிக்கையை எண்ணும் பணியை தொடங்கினர். அப்போது உண்டியலில் வெளிநாட்டு கரன்சிகளும், கேரளா லாட்டரியும் இருந்தன. அதனை கண்டு அதிகாரிகள் வியப்பு அடைந்தனர். கண்காணிப்பு கேமரா உதவியுடன் உண்டியல் பணம் எண்ணும் பணியை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள், தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

    • தன்னிடம் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கும் வாடிக்கையாளர், தன்னை நம்புவது போல தானும் அவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என கடைக்காரர் விரும்பினார்.
    • கடைக்காரர் நர்சு சந்தியாவை தொடர்பு கொண்டு அவருக்காக எடுத்து வைத்த சீட்டுக்கு முதல் பரிசு ரூ. 75 லட்சம் விழுந்திருப்பதை கூறினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அரசே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

    கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறுசிறு கடைகளிலும் இச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதுண்டு.

    இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் உள்ள ஒரு லாட்டரி கடையில் அதே பகுதியை சேர்ந்த நர்சு சந்தியா என்பவர் லாட்டரி சீட்டு வாங்குவார்.

    கடைக்காரர் அவருக்காக ஒரு சீட்டை எடுத்து அதனை தனியாக ஒரு கவரில் போட்டு வைப்பார். பரிசு குலுக்கல் நடந்த பின்னர், அந்த சீட்டுக்கு பரிசு விழுந்திருக்கிறதா? என்பதை பார்த்து விட்டு அதனை நர்சு சந்தியாவிடம் தெரிவிப்பார்.

    கடைக்காரர் எடுத்து வைக்கும் சீட்டை ஒருபோதும் நர்சு சந்தியா வாங்கி பார்ப்பதில்லை. கடைக்காரர் கூறுவதை மட்டும் கேட்டுக்கொள்வார். பல மாதங்களாக இதுபோல அவர் லாட்டரி சீட்டு வாங்கி வந்தார்.

    இந்த நிலையில் சமீபத்தில் ஸ்திரி சக்தி லாட்டரி விற்பனை நடந்தது. இதற்கான சீட்டு ஒன்றையும் நர்சு சந்தியாவுக்காக கடைக்காரர் எடுத்து வைத்திருந்தார்.

    2 நாட்களுக்கு முன்பு குலுக்கல் முடிவுகள் வெளியானது. இதில் நர்சு சந்தியாவுக்காக கடைக்காரர் எடுத்து வைத்திருந்த சீட்டுக்கு முதல் பரிசான ரூ.75 லட்சம் விழுந்திருந்தது.

    நர்சு சந்தியாவுக்கு கடைக்காரர் எடுத்து வைத்த சீட்டின் எண்ணோ அல்லது அதன் விபரமோ தெரியாது. அந்த சீட்டுக்குதான் முதல் பரிசு விழுந்த தகவலும் தெரியாது.

    ஆனாலும் தன்னிடம் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கும் வாடிக்கையாளர், தன்னை நம்புவது போல தானும் அவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என கடைக்காரர் விரும்பினார். எனவே அவர் நர்சு சந்தியாவை தொடர்பு கொண்டு அவருக்காக எடுத்து வைத்த சீட்டுக்கு முதல் பரிசு ரூ. 75 லட்சம் விழுந்திருப்பதை கூறினார்.

    இதனை கேட்டு வியப்பில் மூழ்கிய நர்சு சந்தியா, லாட்டரி விற்பனையாளரின் நேர்மையை பாராட்டினார். இது பற்றி அவர் கூறும்போது, எனக்காக கடைக்காரர் எடுத்து வைத்த சீட்டின் எண் எனக்கு தெரியாது. அவர் நினைத்திருந்தால் சீட்டை மாற்றி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவரது நேர்மை என்னை ஆச்சரியப்படுத்தியது, என்றார்.

    இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து லாட்டரி விற்பனையாளரின் நேர்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    • மழைக்கால பம்பர் லாட்டரி குலுக்கல் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதன் முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும்.
    • இந்த அதிர்ஷ்ட சீட்டு எர்ணாகுளத்தில் விற்பனை ஆகியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அரசே லாட்டரி குலுக்கல் நடத்தி வருகிறது.

    அரசின் பெரும்பாலான வருவாய் லாட்டரி விற்பனை மூலமே கிடைக்கிறது. இதற்காக ஓணம், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களிலும் மழைக்கால பம்பர் லாட்டரி சீட்டுகளை அரசு விற்பனை செய்து வருகிறது.

    இந்த ஆண்டு ஓணம் பம்பர் குலுக்கல் முதல் பரிசு ரூ. 25 கோடி என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விற்பனை தற்போது தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மழைக்கால பம்பர் லாட்டரி குலுக்கல் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதன் முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும். இந்த அதிர்ஷ்ட சீட்டு எர்ணாகுளத்தில் விற்பனை ஆகியுள்ளது.

    இரண்டாம் பரிசு ரூ.50 லட்சம் ஆகும். இந்த சீட்டுகளை வாங்கிய அதிர்ஷ்டசாலி யார்? என்பது இதுவரை தெரியவில்லை. கடந்த 2 நாட்களாக அதிர்ஷ்டசாலியை லாட்டரி விற்பனை துறை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.

    கேரள மாநில அரசின் பூஜா பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.5 கோடி வியாபாரி யாக்கோப் குரியனுக்கு விழுந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில அரசின் பூஜா பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.5 கோடி அறிவிக்கப்பட்டது. இதற்கான லாட்டரி சீட்டு குலுக்கல் கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. இதில் முதல் பரிசு ஆர்.ஏ.591801 என்ற சீட்டுக்கு விழுந்தது. இதையடுத்து இந்த லாட்டரி சீட்டு வாங்கியது யார் என்று அதிகாரிகள் தேடினர்.

    இதில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கூட்டாட்டுக்குளம் பகுதியை சேர்ந்த லாட்டரி சீட்டு வியாபரி யாக்கோப் குரியன் கடையில் விற்பனையானது தெரியவந்தது. ஆனால் முதல் பரிசு யாருக்கு விழுந்தது என்பது தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில் முதல் பரிசு லாட்டரி சீட்டு வியாபாரி யாக்கோப் குரியனுக்கு விழுந்தது தெரிய வந்தது.

    இது குறித்து ரூ.5 கோடி பரிசு பெற்ற லாட்டரி வியாபாரி யாக்கோப் குரியன் கூறியதாவது:-

    நான் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறேன். ஆனால் எனக்கு இதுவரை பரிசு விழவில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு சீட்டை நானே வாங்கிக் கொள்வேன். அப்படி நான் வாங்கிய லாட்டரி சீட்டை என் மகனிடம் கொடுத்து வைத்திருந்தேன். அந்த சீட்டுக்குத்தான் முதல் பரிசு விழுந்தது. அதனை நான் வெளியில் சொல்லவில்லை. எனது மகன் கோவைக்கு சென்றிருந்தான். நேற்றுதான் ஊருக்கு திரும்பினான்.

    இதையடுத்து அவனை அழைத்துக்கொண்டு முதல் பரிசு தொகைக்கான லாட்டரி சீட்டை கூட்டாட்டுக்குளம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளேன். இந்த தொகையை எங்கள் குடும்ப தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரளாவில் நெல்லையை சேர்ந்தவரிடம் விற்காமல் இருந்த லாட்டரி சீட்டில் ரூ.5 கோடி பரிசு கிடைத்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    நெல்லை மாவட்டம் கோட்டை கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா (வயது 50).

    இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி சுமதி மற்றும் 2 குழந்தைகளுடன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மூவாற்றுப்புழா என்ற இடத்தில் குடியேறினார்.

    மிகவும் ஏழ்மை நிலையில் குடும்பத்தை நடத்தி வந்த செல்லையா வாழ்க்கையை ஓட்டுவதற்காக மொத்த வியாபாரிகளிடம் லாட்டரி சீட்டுகளை வாங்கி அதை நடந்தே சென்று பொது மக்களிடம் விற்று வந்தார்.

    சமீபத்தில் கேரள அரசு வெளியிட்ட காருண்யா பாக்கியஸ்ரீ பம்பர் லாட்டரி சீட்டுகளையும் வாங்கி விற்று வந்தார். குலுக்கலுக்கு முதல் நாள் 4 லாட்டரி சீட்டுகள் மட்டும் விற்பனையாகவில்லை. அவரும் பலரிடமும் லாட்டரி சீட்டை வாங்கிக் கொள்ளும் படி கெஞ்சிக் கேட்டும் யாரும் வாங்கவில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த செல்லையா அந்த லாட்டரிச்சீட்டுகளுடன் வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் லாட்டரி முடிவுகள் வெளியானபோது தான் விற்ற லாட்டரிச்சீட்டிற்கு பரிசு விழுந்து உள்ளதா என்று அவர் பார்த்த போது அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரிடம் விற்காமல் இருந்த ஒரு லாட்டரிச்சீட்டிற்கு முதல் பரிசான ரூ.5 கோடி கிடைத்திருந்தது தெரிய வந்தது.


    உடனே தான் வாங்கிய லாட்டரி  மொத்த வியாபாரியிடம் சென்று தனக்கு பரிசு விழுந்தததை செல்லையா உறுதி செய்துகொண்டார். ரூ.5 கோடி பரிசு பெற்றது பற்றி செல்லையா கூறியதாவது:-

    லாட்டரிச்சீட்டுகளை விற்று ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்த என்னால் எனது குடும்பத்தினரை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடியவில்லை. பிள்ளைகளையும் சரியாக படிக்க வைக்க முடியவில்லை. லாட்டரி பரிசு மூலம் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுப்பேன். சொந்த ஊரில் வீடு கட்டுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×