மோடி கூட்டணியை தமிழகத்தில் செல்லாக்காசாக்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிரதமர் மோடி கூட்டணியை செல்லாக்காசாக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ்பொய்யாமொழியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தபோது எடுத்த படம்.
தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ்பொய்யாமொழியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தபோது எடுத்த படம்.
Published on

திருச்சி:

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகில் நேற்று இரவு தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றி பெறுவதுஉறுதி. அவரை குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். இன்று முதல் ஒவ்வொரு வாக்காளரும் தங்களது பங்கிற்கு 10 வாக்குகளை சேகரிக்க வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மகத்தான வெற்றி கொடுத்தீர்கள். அதே போன்ற ஒரு வெற்றியை இந்தத் தேர்தலிலும் தர வேண்டும்.

பிரதமர் மோடி திடீரென ஒருநாள் இரவு எழுந்து ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏ.டி.எம். வாசலில் காத்துக் கிடந்தார்கள். காத்திருந்து, காத்திருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போய்விட்டார்கள். அவர் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார்.

அந்த நோட்டில் ஒன்றை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன் (அதை தூக்கி காட்டினார்). ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மோடியையும் அவருடன் கூட்டணி அமைத்துள்ள எடப்பாடி பழனிசாமியையும் நடைபெறவுள்ள தேர்தலில் நீங்கள் செல்லாக்காசாக்க வேண்டும்.

தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனிதா உள்பட 14 குழந்தைகள் தற்கொலை செய்துவிட்டனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், கல்வி கடன் ரத்து செய்யப்படும், முதியோர்களுக்குஓய்வூதியம் வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள் ஆக உயர்த்தப்படும்.

குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப்படும். பெண்களுக்கு இலவசமாக பஸ்சில் பயணம் செய்ய வசதி செய்யப்படும் என தலைவர் அறிவித்துவிட்டார். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். இந்த சலுகைகள் எல்லாம் நீங்கள் பெற வேண்டுமானால் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும். எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்-அமைச்சராக வந்தார் என்று தெரியுமா? தவழ்ந்து, ஊர்ந்து சென்று முதல்-அமைச்சர் ஆனார். சசிகலாவின் காலைப்பிடித்து முதல்-அமைச்சரான அவர், இப்போது சசிகலாவின் காலை வாரி விட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com