வங்கதேசத்தில் வன்முறை: 778 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்- மத்திய அரசு

வங்கதேசத்தில் வன்முறை: 778 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்- மத்திய அரசு

போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Published on

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.

இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து இதுவரை 778 இந்திய மாணவர்கள் பல்வேறு போக்குவரத்து மூலம் நாடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, டாக்கா, சிட்டகாங் விமான நிலையங்கள் வழியாக வழக்கமான விமான சேவைகள் மூலம் சுமார் 200 மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

எஞ்சிய சுமார் 4000க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.

நேபாளம், பூட்டான் நாடுகளை சேர்ந்த மாணவர்களும் கோரிக்கையின் பேரில் இந்தியாவுக்குள் நுழைவற்கு உதவப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com