

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் தனியாளாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் மீது தாக்கி வருகிறது.
போர் தொடங்கியதில் இருந்தே ஈரானுக்கு நெருக்கமான சீனா மற்றும் ரஷியா ஏன் உதவிக்கு வரவில்லை என்ற கேள்வி பலரிடையே எழுந்தது. இரு நாடுகளும் மேற்குலகிற்கு கண்டனம் தெரிவித்தாலும் நேரடி போரில் இறங்கவில்லை.
இந்த சூழலில் திரைமறைவில் ஈரானுக்கு இந்த இரு நாடுகளும் ஆன அனைத்து உதவிகளையும் செய்து வருவது தெரியவந்துள்ளது.
வெகு காலமாகவே மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை முறியடிக்க சீனா, ரஷியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
இதற்கு மூன்று நாடுகளும் 'ஆக்சிஸ் ஆஃப் எவேஷன்' (Axis of Evasion) என்ற ரகசிய கூட்டணியை உருவாகியுள்ளன என்று கூறப்படுகிறது.
ஆக்சிஸ் ஆஃப் எவேஷன்
இதன் மூலம் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறி, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை சீனா இறக்குமதி செய்கிறது. பதிலுக்கு, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னணு உதிரிபாகங்களை ஈரானுக்கு வழங்குகிறது.
மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்படும் சிவிலியன் பயன்பாட்டு உதிரிபாகங்கள், சீன விநியோகஸ்தர்கள் வழியாக ஈரானிய ராணுவத் தொழிற்சாலைகளுக்குச் சென்றடைகின்றன.
ஈரானின் ஷாஹெத் ரக டிரோன்கள் உருவாக சீனாவும் ரஷியாவுக்கும் அனுபாடுகின்றன. உக்ரைன் போரில் ரஷியா இந்த டிரோன்களை பயன்படுத்தி வருகிறது.
இப்போது ரஷியாவிலேயே ஈரானிய தொழில்நுட்பத்துடன் டிரோன் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரஷியாவின் Garpiya-3 போன்ற நவீன டிரோன்களை உருவாக்க சீன நிபுணர்கள் உதவி செய்கின்றனர்.
தற்போது ரஷியா தயாரித்த டிரோன்களைக் கொண்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அண்மையில் தெரிவித்தார். மேலும் மேற்கத்திய உளவு அமைப்புகளும் இது குறித்து எச்சரிக்கின்றன.
ஈரான் போர்
'ஆக்சிஸ் ஆஃப் எவேஷன்' ரகசிய கூட்டணி மூலம் ஈரான் போரிட தேவையான அனைத்தையும் ரஷியா, சீனா திரைமறைவில் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
ஈரானிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் துல்லியமாக இலக்கைத் தாக்க சீனாவின் BeiDou செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
இது அமெரிக்காவின் GPS வசதிக்கு மாற்றாக ஈரானுக்குக் கிடைத்துள்ளது. இதன் மூலம் போர்க்களத்தில் போலி சிக்னல்களை உருவாக்கி அமெரிக்கப் படைகளை ஈரான் குழப்பி வருகிறது.
ஏவுகணைகளுக்கான திட எரிபொருள் மற்றும் வெடிமருந்துகள் தயாரிக்கத் தேவையான வேதிப்பொருட்கள் சீனாவிலிருந்து மறைமுகமாக ஈரானுக்கு அனுப்பப்படுகின்றன.
அதிபர் டிரம்ப் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், ஈரானைத் தாக்குவது மட்டுமல்லாமல், அதற்குப் பின்னால் இருந்து உதவும் சீனா மற்றும் ரஷியாவின் இந்த விநியோகச் சங்கிலியை உடைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இதனாலேயே அவர் போரை கைவிட்டு பேச்சுவார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளதாக போர் மற்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.