பிரதமர் மோடியிடம் சோழர் கால தாமிர செப்பேடுகளை ஒப்படைத்த நெதர்லாந்து

யுனெஸ்கோ அமைப்பின் தலையீட்டால் இந்த செப்பேடுகள் திருப்பி தரப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியிடம் சோழர் கால தாமிர செப்பேடுகளை ஒப்படைத்த நெதர்லாந்து
Published on

ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை போற்றும் வகையில் இளம் கலைஞர்கள் சார்பில் நடந்த நடனம், இசை கச்சேரி உள்ளிட்டவற்றை அவர் கண்டு ரசித்தார்.

நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

இந்நிலையில், பிரசித்தி பெற்ற ஆனைமங்கலம் தாமிர தகடுகள் பிரதமர் மோடியின் முன்னிலையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இவை லெய்டன் தகடுகள் என அழைக்கப்படுகின்றன.

தென்னிந்திய அரசாட்சிகளில் ஒன்றான 11-ம் நூற்றாண்டு சோழ அரசாட்சி காலத்திலான இந்தக் கலை பொருட்கள் லெய்டன் பல்கலைக்கழகத்தில் கடந்த 300 ஆண்டாக வைக்கப்பட்டு இருந்தன.

மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக, 2023-ல் யுனெஸ்கோ அமைப்பின் தலையீட்டால் இந்த செப்பேடுகள் திருப்பி தரப்பட்டுள்ளன.

இந்தச் செப்பேடுகள் சோழர்களுடைய பெருமையை குறிப்பிடுவதுடன், புத்த மதத்திற்கு அவர்கள் அளித்த ஆதரவையும் பறைசாற்றும் வகையிலான முக்கிய ஆவணங்களாகும்.

30 கிலோ எடை கொண்ட 21 செப்பேடுகள் ஒரு வெண்கல வளையம் கொண்டு பிணைக்கப்பட்டுள்ளன. அதில், முதலாம் ராஜேந்திர சோழரின் முத்திரை உள்ளது. இந்த பதிவுகளின்படி 985 முதல் 1014 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவருடைய மகனான ராஜேந்திர சோழன் ஆகியோரின் காலத்தில் இவை உருவாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com