ஆபரேஷன் சிந்தூர் குறித்த கருத்து: ஐ.நா.சபையில் பாகிஸ்தானை சாடிய இந்தியா

இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்தத் தகுதியும் இல்லை.பாகிஸ்தான் விரும்புவது போல பயங்கரவாதத்தை ஒருபோதும் இயல்பாக்க முடியாது என்றார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்த கருத்து: ஐ.நா.சபையில் பாகிஸ்தானை சாடிய இந்தியா
Published on

நியூயார்க்:

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது நடந்த விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் தூதர் ஆசிம் இப்திகார் அகமது, இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் தூதரின் கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் ஐ.நா.சபையில் பேசியதாவது:

எனது நாட்டிற்கும் எனது மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதை ஒரே நோக்கமாகக் கொண்ட பாகிஸ்தானின் பிரதிநிதியின் கருத்துகளுக்கு பதிலளிக்கிறேன்.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் ஒரு பொய்யான மற்றும் சுயநலமான விளக்கத்தை அளித்துள்ளார்.

மே 9-ம் தேதி வரை இந்தியாமீது மேலும் தாக்குதல்கள் நடத்த பாகிஸ்தான் அச்சுறுத்தி வந்த நிலையில், மே 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் எங்கள் ராணுவத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு சண்டையை நிறுத்துமாறு கெஞ்சியது.

இந்தியாவின் நடவடிக்கையால் பல பாகிஸ்தான் விமான தளங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள், அழிக்கப்பட்ட ஓடுபாதைகள் மற்றும் எரிந்துபோன விமான கட்டமைப்பு படங்கள் பொதுவெளியில் உள்ளன.

பாகிஸ்தான் விரும்புவது போல பயங்கரவாதத்தை ஒருபோதும் இயல்பாக்க முடியாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒரு அரச கொள்கைக் கருவியாகத் தொடர்ந்து பயன்படுத்துவதை சகித்துக்கொள்வது இயல்பானது அல்ல.

இந்த புனிதமான மன்றம், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை சட்டப்பூர்வம் ஆக்குவதற்கான ஒரு தளமாக மாறமுடியாது. இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்தத் தகுதியும் இல்லை. சட்டத்தின் ஆட்சி குறித்து பாகிஸ்தான் சுய பரிசோதனை செய்துகொள்வது நல்லது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com