

நடிகையும், பா.ஜ.க பிரமுகருமான குஷ்பு மற்றும் அவரது கணவரும், இயக்குநருமான சுந்தர் சி ஆகியோர் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தங்களது மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
குஷ்பு 2000-ஆம் ஆண்டு சுந்தர்.சி-யைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமணத்திற்கு பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை குஷ்பு,
“இன்று டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் பெரும்பேறு எங்களுக்குக் கிடைத்தது. எனது கணவர் சுந்தர் சியும் நானும் இணைந்து, எங்கள் மகளுக்கும் ஷ்ரவன் சீனிவாசனுக்கு நடைபெறவுள்ள திருமணத்திற்கு அவரை அழைத்தோம்.
பிரதமர் தம்பதியினரை மனமுவந்து வாழ்த்தினார். தனது மிகத் தீவிரமான பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கிய அவருக்கு நாங்கள் உளமார நன்றி தெரிவிக்கிறோம். நாங்கள் மிகுந்த கடமைப்பட்டவர்களாகவும், பணிவுணர்வு கொண்டவர்களாகவும் உணர்கிறோம். பிரதமருக்கு நன்றி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.