அரசு அலுவலகங்களிலும், மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர்? - டிடிவி தினகரன் கண்டனம்

‘விளம்பரம் என்பது வேறு, மக்கள் பணி என்பது வேறு’ என்பதை முதலமைச்சரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு உணர்த்திட வேண்டும்.
அரசு அலுவலகங்களிலும், மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர்? - டிடிவி தினகரன் கண்டனம்
Published on

தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ள சூழலில், அக்கட்சியின் நிர்வாகிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் “தவெகவினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.

அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் நிர்வாக அமைப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்?

முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் "யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்" என்று சூளுரைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மேலும் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர்.

ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதலமைச்சர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதலமைச்சரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து Insta Reels களாக எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும் டிரெண்டாகவும் மாறியுள்ளது.

எனவே, விளம்பரம் என்பது வேறு, மக்கள் பணி என்பது வேறு என்பதை முதலமைச்சரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு உணர்திடுவதொடு, அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தவெகவினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்துகிறேன் .

X

Maalai Malar
www.maalaimalar.com