

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் இத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிடுகிறது. அண்மையில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக டெல்லிக்கு சென்ற விஜய் பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச உள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே த.வெ.க. கூட்டணி தொடர்பான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று நிர்வாகிகள் கூறினர்.
இந்நிலையில், தவெகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியான நிலையில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.
கொளத்தூரில் நேற்று நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "த.வெ.க. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. பல ஆஃபர்களை த.வெ.க. தலைவர் விஜய்க்கு கொடுத்தார்கள். ஆனால், அனைத்து ஆஃபர்களையும் விஜய் நிராகரித்துவிட்டார். 90 தொகுதிகள் தருவதாக பேரம் பேசினார்கள். ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருக்கலாம் என பேரம் பேசினார்கள். பதவிக்காக டெல்லிக்கு அடிபணிய மாட்டோம்" என்று தெரிவித்தார்.