தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக சித்தரிப்பதா?- கவர்னருக்கு தமிழக அரசு கண்டனம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை விமர்சிக்க குடியரசு தினத்தை அரசியல் கேடயமாக்குவது மிகவும் கண்டனத்திற்குரியது. நம் நாட்டின் குடியரசுத் தினப் பெருமைகளையும், தமிழ்நாட்டின் அருமைகளையும் கொச்சைப்படுத்த வேண்டாம்.
தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக சித்தரிப்பதா?- கவர்னருக்கு தமிழக அரசு கண்டனம்
Published on

சென்னை:

குடியரசு தின விழா வாழ்த்து செய்தியில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை விமர்சிக்க குடியரசு தினத்தை அரசியல் கேடயமாக்குவது மிகவும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்தில் கவர்னரின் செயல்பாடு, அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை, கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு என தனக்கு எதிராக செய்திகள் வந்து கொண்டிருப்பதை பார்த்து கவர்னர் ரவி தனது தூக்கத்தை தொலைத்திருக்கிறார். அதனை போக்க தி.மு.க. அரசு மீது அவதூறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

நிதி ஆயோக் அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 17 இலக்குகளில் தமிழ்நாடு பெரும்பாலானவற்றில் முன்னிலை பெற்றிருக்கிறது. நிதி ஆயோக்கின் அறிக்கையில் சொல்லப்பட்டது எல்லாம் கவர்னருக்கு தெரியாதா? இல்லை பிரதமர் மோடி ஆட்சியால் அமைக்கப்பட்ட நிதி ஆயோக் மீதே நம்பிக்கை இல்லையா?.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர் தங்கள் மகள்களை தமிழ்நாட்டுக்கு படிக்க அனுப்பும்போது பாதுகாப்பாக உணர்கின்றனர்'' என பேசிய அவரது உதடுகள்தான், இன்றைக்கு தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம், தீவிரவாத அச்சுறுத்தல் என்றெல்லாம் புரண்டு பேசுகின்றன. பிளவு வாதப் பேச்சை பேசுவதற்கும், மாநில அரசோடு மல்யுத்தம் நடத்துவதற்கும் ராஜ்பவன் ஒன்றும் அரசியல் குஸ்தி களமல்ல.

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க விடாமல் முட்டுக்கட்டைப் போட்டு பல்கலைக்கழகங்கள் நிர்வாகத்தை முடக்கி வைத்திருப்பது கவர்னர். அவரது பேச்சுகள் மக்களிடையே கொதிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், யாருடைய அரசியல் சதிக்கு துணை போகிறார்?

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் படித்து முன்னேறி நல்ல நிலைமைக்கு வந்துவிடக்கூடாது என்ற சனாதன வர்ணாசிரம கோட்பாட்டை தூக்கி பிடித்து, குலக்கல்வியை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் மத்திய பா.ஜனதா அரசின் ரப்பர் ஸ்டாம்பாக கவர்னர் திகழ்கிறார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை சீரழிக்க நினைக்கும் வஞ்சகர்களுக்கு துணை போகும் வேலையை ஒரு மாநிலத்தின் கவர்னர் செய்ய துணிந்திருக்கிறார். தொடர்ந்து தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக சித்தரித்து தமிழர்களை தேச விரோதிகள் போல் பேசிவருவது அவருக்கு அழகல்ல. கவர்னரை மாற்றிவிடாதீர்கள். அவர்தான் தி.மு.க.வுக்கான பிரசார பீரங்கி' என எங்கள் முதலமைச்சர் தொடர்ந்து சொல்லி வருகிறார். அந்த ஆத்திரம்தான் கவர்னர் அறிக்கையில் நிரம்பி வழிகிறது.

வடக்கு எத்தனை சதிகளைச் செய்தாலும் அதை முறியடிக்கும் கலையை அண்ணாவும், கருணாநிதியும் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். அரசியல் செய்ய ஆசை இருந்தால் அப்பதவியிலிருந்து விலகி, எங்களோடு நேருக்கு நேர் அரசியல் களத்திற்கு வரட்டும். அதை விடுத்து குடியரசு தினம், சட்டமன்றம் என எதை எடுத்தாலும் அரசியல் செய்து, நம் நாட்டின் குடியரசுத் தினப் பெருமைகளையும், தமிழ்நாட்டின் அருமைகளையும் கொச்சைப்படுத்த வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com